நடிகர் சங்கத்தில் முறைகேடு புகார்: துணை நடிகர்- நடிகைகள் திடீர் போராட்டம்
சென்னை: நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நடிகர்-நடிகைகள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு நாசர், விஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டினர். அடுத்து நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் புதிய படம் ஒன்றில் நடித்து அதில் கிடைக்கும் சம்பள தொகை முழுவதையும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
ஓரிரு மாதத்தில் கட்டுமான பணிகளை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகளை கண்டித்து துணை நடிகர், நடிகைகள் சிலர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலகம் முன்னால் நேற்று காலை திரண்டனர். அப்போது நடிகர் சங்கமே எங்களுக்கு வேலை கொடு, வேலை கொடு எனவும் அவர்கள் முழக்கமிட்டபடியே அலுவலகத்துக்குள் நுழையவும் முயன்றனர்.
ஆனால் போலீசார் அனுமதி மறுக்கவில்லை. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க உறுப்பினரும் இந்தியன் ரிப்போர்ட்டர் ஆசிரியருமான வாராகி, நடிகர் சங்க நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை. நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிதி வசூலில் முறைகேடு நடந்துள்ளது. கட்டிடம் கட்டும் பணியிலும் டெண்டர் விடாமல் கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். இதை எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications