ரெட்டி சென்னையில்தானே இருக்கிறார், இங்கதான் 'கேஸ்' போடனும்.. சாமி வழக்கு!
சென்னை: இந்தியாவில் கிளை வைத்துள்ள சிங்கப்பூர் நிறுவனம் தன் மீது சிங்கப்பூரில் அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது முறையற்றது. அதன் முதன்மை இயக்குநர் சின்னபாலா நாகேஸ்வர ரெட்டி சென்னையில் வசிப்பதால் இங்குதான் வழக்குத் தொடர வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் சுப்பிரமணியம் சாமி.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டெல்லியில் கடந்த 26.4.2012 அன்று பத்திரிகைக்கு பேட்டி அளித்தேன். அதில் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதில் நடந்த முறைகேடு குறித்தும், அந்த முறைகேட்டில் அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் தொடர்பு குறித்தும் கூறி இருந்தேன்.

இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து பல லட்சம் அமெரிக்க டாலரை சிங்கப்பூரில் உள்ள தன் நிறுவனத் துக்கு மாற்றியுள்ளது என்றும் கூறினேன். இதையடுத்து இந்த நிறுவனம் 30.4.2012 அன்று எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில் நான் தெரிவித்த குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியிருந்தது.
இதற்கிடையில் என் மீது சிங்கப்பூரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை இந்த நிறுவனம் தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் தான் செயல்படுகிறது. அதன் முதன்மை இயக்குனர் சின்னபாலா நாகேஸ்வர ரெட்டி சென்னையில்தான் வசிக்கிறார்.
எனவே என் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும். சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தேவையில்லாதது. எனவே சிங்கப்பூர் கோர்ட்டில் என் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு தடை விதிக்க வேண்டும். சென்னை கோர்ட்டில் என் மீது அவதூறு வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications