சின்ன பிரச்சினையில்லை, சின்னமே பிரச்சினை.. அதிமுக-தமாகா கூட்டணி அமைவதில் சிக்கல்
சென்னை: 15 சீட் வரை தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கித்தர அதிமுக முன்வந்தபோதிலும், இரட்டை இலை சின்னத்தில் த.மா.கா போட்டியிட வேண்டும் என்று அதிமுக தலைமை நிபந்தனை விதித்துள்ளதால், கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணி பக்கமாக வாசன் நகர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடவும், எஞ்சிய 7 தொகுதிகளில் தோழமை கட்சியினரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்யவும் தீர்மானித்து சில தினங்கள் முன்பு ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டார்.
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய இரு கட்சிகளும், அதிமுக கூட்டணியில் இணைய விரும்பிவந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் சீட் தரப்படவில்லை.
சந்திப்பதாக தகவல்
இன்று அமாவாசை தினம் என்பதால், வாசனோடு கூட்டணி பற்றி ஜெயலலிதா பேசுவார். இருவருக்கும் நடுவே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. நேற்று இரவு 2 மணிவரை அதிமுக சார்பில் சில அமைச்சர்களும், த.மா.கா சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போன்ற தலைவர்களும் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியது.
கண்டிஷன்
இந்நிலையில், இன்று வாசனை ஜெயலலிதா சந்திக்கவில்லை. இதற்கு காரணம், சின்னம் பிரச்சினை என்று கூறப்படுகிறது. 15 தொகுதிகள் வரை த.மா.காவுக்கு ஒதுக்க, அதிமுக முன்வந்ததாகவும், ஆனால், அத்தனை தொகுதிகளிலும், அதிமுக சின்னமான இரட்டை இலையில்தான் வாசன் கட்சியினர் போட்டியிட வேண்டும் என்றும் கண்டிஷன் போடப்பட்டதாம்.
சந்திப்பு ரத்து
காங்கிரசுக்கு மாற்றாக, த.மா.காவை கொண்டுவர முயன்று வரும் வாசன், தேர்தல் ஆணையத்திடமிருந்து, தங்கள் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை பெற்றுள்ளார். இந்நிலையில், அதிமுகவின் சின்னத்தில், த.மா.கா போட்டியிட்டால் அது அக்கட்சிக்கு பின்னடைவு என்று வாசன் கருதுகிறார். இதனால் தொகுதி உடன்பாடு செய்வதற்காக ஜெயலலிதாவை இன்று வாசன் சந்திக்கவில்லை.
கடைசியில் கை விரிப்பு
மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா நிர்பந்திக்கிறார் என்ற தகவலை தன்னிடம் போனில் சொன்ன அமைச்சரிடம் பாய்ந்துவிட்டாராம் வாசன். என்னை நம்பி திரண்டு வந்துள்ள லட்சக்கணக்கான தொண்டர்களிடம் நான் தலைகாட்ட முடியாது. எங்களுக்கென்று தனியான அடையாளம் வேண்டும். இவ்வளவு காலம் கழித்து கடைசி நேரத்தில் இப்படிச் சொல்வது சரியல்ல என்று வாசன் கோபம் காட்டியதாக கூறப்படுகிறது.
சாதனை முயற்சி
அதிமுக இதுவரை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது கிடையாது. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதுபோல போட்டியிட்டது. பின்னர் எந்த ஒரு கட்சி தலைமைக்கும் அந்த தைரியம் வரவில்லை. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையையே களமிறக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதுதான், இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கிசுகிசுக்கிறது கார்டன் வட்டாரம்.
மக்கள் நல கூட்டணி
அதிமுக கண்டிஷனுக்கு வாசன் சம்மதிக்க மாட்டார் என்றே தெரிகிறது. எனவே அக்கட்சியின் அடுத்த தேர்வு, மக்கள் நல கூட்டணியாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தோர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், த.மா.கா இணையாது என்பது அக்கட்சியினர் எண்ணமாகவும் உள்ளது.