பெண் நிர்வாகியை தாக்குவதா? அய்யாக்கண்ணு மேல் நடவடிக்கை எடுங்கள் - தமிழிசை
பாஜக பெண் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பாஜக பெண் நிர்வாகியை தரக்குறைவாக திட்டி தாக்கிய அய்யாக்கண்ணு மீது காவல்முறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் குமரியிலிருந்து சென்னை கோட்டை வரை நடைபயண விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவில் வளாகத்தில் பக்தர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
அய்யாக்கண்ணுவிற்கு எதிர்ப்பு
அப்போது தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், பக்தர்கள் யாரும் நோட்டீஸ் வாங்கக்கூடாது. கோயில் வளாகத்தில் நோட்டீஸ் கொடுக்கக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளுக்கும், நெல்லையம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண் நிர்வாகி ஆத்திரம்
அப்போது நெல்லையம்மாளை அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் வாடி போடி என்று பேசியதாக தெரிகிறது. தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் நிர்வாகி அய்யாக்கண்ணு கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
நெல்லையம்மாள் புகார்
இதனையடுத்து ஆத்திரமடைந்த மற்ற விவசாயிகள் நெல்லையம்மாளை தாக்க முயன்றனர். கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் அய்யாக்கண்ணு தரப்பினரையும், நெல்லையம்மாளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே விவசாயிகள் தன்னை தாக்கியதாக நெல்லையம்மாள் திருக்கோயில் போலீசில் புகார் செய்தார். மேலும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
நடவடிக்கை தேவை
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் அய்யாக்கண்ணுவை விட்டது தவறு. அவர் அங்கே நோட்டீஸ் கொடுக்க அனுமதி அளித்தது யார்?.
பின் விளைவுகள் ஏற்படும்
அவர் பிரதமர் மோடியை அவமதித்து அய்யாக்கண்ணு பிரச்சாரம் செய்தார். அதை தட்டிக்கேட்ட பெண் நிர்வாகி நெல்லையைச் சேர்ந்த நெல்லையம்மாளை தவறாக பேசி தாக்கியுள்ளனர். பெண் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தமிழிசை எச்சரித்துள்ளார்.