அகதியாய் வந்த ஈழ மாணவி – அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவ கலந்தாய்வில் இடம்பெறவில்லை!
சென்னை: அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழ் மாணவி என்ற ஒரே காரணத்திற்காக மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை நந்தினி என்ற மாணவி.
இலங்கையில் இருந்து அகதிகளாய் தமிழகத்தை நாடி வரும் சகோதர, சகோதரிகள் பல ஆயிரம் பேர்.
அப்படி 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாய் வந்தவர்கள்தான் ராஜா மற்றும் குடும்பத்தினர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி:
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் இக்குடும்பம் வசித்து வருகின்றது. ராஜா ஒரு பெயிண்டிங் தொழிலாளி. இவரது ஒரே மகளான நந்தினி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருந்தார். மேலும், 197.5 கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தார் நந்தினி.
மருத்துவராகும் கனவு:
அதனால், எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், தரவரிசைப் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை.
ஈழத்தமிழ் மாணவி:
அதற்கான காரணமாக அவர் ஈழத்தமிழ் மாணவி என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 84ஆம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த குழந்தைகளுக்கு மருத்துவத்தில் 20, பொறியியலில் 25, வேளாண்மை 10,பாலிடெக்னிக் 40, சட்டக் கல்லூரியில் 5 இடங்கள் என மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் அமல்படுத்தப்பட்டது:
1993 ஆம் ஆண்டில் இந்த இட ஒதுக்கீடு சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 1996 ஆம் ஆண்டில் இவ்விட ஒதுக்கீடு மீண்டும் அமல் படுத்தப்பட்டது.
நிறுத்தப்பட்ட இடஒதுக்கீடு:
கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக சேலம் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கினால் இவ்விட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டது. இதனால்தான் தற்போது மாணவி நந்தினிக்கும் மருத்துவக் கல்வி கனவாகவே போய்விட்டது.