தமிழர் திருநாள் தை பொங்கல்: உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மண்ணின் மணத்துடனும் கொண்டாடினர்.
தமிழர்களின் வாழ்வாதாரமான உழவுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மண்ணுக்கு உரிய கலாச்சாரத்துடன் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
சூரியனுக்கு நன்றி
வாசலில் தெளித்து கோலமிட்டு கல் அடுப்பு மூட்டி புதுப் பானையில் புத்தரிசி போட்டு பொங்கலிட்டு தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கோவில்களில் வழிபாடு
கரும்பு, மஞ்சள், புத்தாடை, வாசலில் வண்ணக் கோலங்கள், வீடுகளில் விருந்தினரை வரவேற்கும் தோரணங்கள் என ஒவ்வொரு தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கலை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பொங்கல் நாளில் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
250 பானைகளில் பொங்கல்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், ஒரே இடத்தில் 250 பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் கொண்டாடினர். அகஸ்தீஸ்வரத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் முற்றத்தில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக அகஸ்தீஸ்வரத்தில் ஊர் கூடி, ஒரே இடத்தில் மக்கள் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படயலிட்டு வழிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தலைப்பொங்கல்
தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகள் முதல் வரிசையிலும் மற்றவர்கள் அடுத்தடுத்த வரிசைகளிலும் பொங்கல் வைத்தனர். இதனை காண கன்னியாகுமரிக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் அகஸ்தீஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
பென்னிகுக் பொங்கல்
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் 174வது பிறந்த நாளை தேனி, கம்பம் பகுதியில் கிராம மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். தேனி பாலார்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அங்குள்ள சமுதாயக் கூடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர், அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முல்லைப் பெரியாற்றில் வழிபாடு
தங்களின் வாழ்வு சிறக்க உதவியாக இருந்த பென்னிகுவிக்குக்கு நன்றி செலுத்தி சிறப்பு வழிபாடும் நடத்தினர். இதேபோல் கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராம மக்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாகச் சென்று ஊர் அருகே உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றுப் பாலத்தில் பென்னி குவிக் படத்தை வைத்து வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.
சேவல் சண்டை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் அருகில் உள்ள கோவிலூர் மற்றும் பூலாம்வலசில் நடைபெற்ற சேவல் சண்டைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சேவல் சண்டை மாலை 6 மணி வரை நடைபெற்றது. சேவல் சண்டையைக் காண ஆயிரக்கணக்காணோர் குழுமியிருந்தனர். போட்டியில் ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றனர்.
மாட்டுப் பொங்கல்
தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாடுகளுக்கு அலங்காரம்
அதையொட்டி, உழவனின் நண்பனாக இருந்து உழைக்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்கும் பொட்டுகள் இட்டு, மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் மரியாதை செலுத்துவார்கள். இதைத் தொடர்ந்து, மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் பொங்கி, மாட்டை கடவுளாக மதித்து விவசாயிகள் வழிபடுவர்.
ஜல்லிக்கட்டு
பின்னர், மாடுகளுக்கு உண்வு அளித்து, விவசாயிகளும், உற்றார் உறவினர்களும் உண்டு மகிழ்வர். மாட்டுப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும், ஜல்லிகட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். சில கிராமங்களில் மஞ்சுவிரட்டும் நடைபெற்று வருகிறது.