பொங்கல் இலவச வேட்டி, சேலை... நாளை முதல் வாங்கிக் கொள்ளலாம்!
சென்னை: பொங்கல் பண்டிக்கைக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி சேலை விநியோகம் நாளை தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மக்களின் வாழ்வாதார தொழிலாக நெசவுத் தொழில் முதன்மை பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்குவதற்காகவும், அப்போதைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரால் 1983 ஆம் ஆண்டு இந்த வேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், பெண்களின் விருப்பத்திற்கேற்ப சேலைகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மாற்றம் மற்றும் தரமான சேலைகளை வழங்கும் வகையில் 60ஆம் எண் பருத்திச் சாயமிட்ட நூலினை பாவாகவும், 80/34 பருமன் சாயமிட்ட பாலியஸ்டன் நூலினை ஊடையாகவும், 150 பருமன் காட்லுக் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை கரையாகவும் கொண்ட பாலிகாட் சேலைகளை வழங்க கடந்த ஆண்டு அம்மாவால் ஆணையிடப்பட்டது.
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 486 கோடியே 36 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 15,000 கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 50,000 விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இந்தத் திட்டத்திற்கு தேவையான விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வருவாய் துறை வழங்கிய தேவைப் பட்டியலின் படி அனைத்து மாவட்டங்களிலுள்ள தாலுகா அலுவலகங்களுக்கு 5.12.2014 முதல் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் 2015ஆம் திருநாளையொட்டி, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேட்டி சேலை விநியோகம் நாளை முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.