நேபாள நிலநடுக்க பேரழிவு - ரூபாய் 5 கோடி நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு!
சென்னை: நேபாள நாட்டில் ஏற்பட்ட நில நடுக்க பேரிழப்பிற்கு தமிழக அரசு ரூபாய் 5 கோடி நிவாரணத்தொகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அங்கு பலர் உயிரிழந்ததுடன், குடியிருப்புகளும் சேதமடைந்தன. அத்துடன் அதன் அருகில் உள்ள பீகார் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களும் பாதிக்கப்பட்டன.
நேபாள நாட்டில் உள்ள பல்வேறு புனித தலங்களை தரிசிக்க சென்ற அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக திரும்புவதற்காக தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
குறிப்பாக கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி எண்கள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக அணுகும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் இலவச தங்கும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டது. இந்த நிலையில் நேபாள நாட்டுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு நிவாரணமாக ரூபாய் 5 கோடியை அறிவித்து உள்ளது.