ஜெயலலிதாவுக்கு தீராத சிக்கல்கள்.. பறிபோகிறதா ஆர்.கே.நகர் வெற்றி?
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா வெற்றிக்காக தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டியதாக சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை: சட்டசபை தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றிபெற்றதாக அறிவித்ததை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கில் பதிலளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவரது வெற்றி செல்லுமா, செல்லாதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிரவீணா ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலின்போது எனக்கு வாக்கு சேகரிக்க சமமான வாய்ப்பு அளிக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் பிரசாரம் செய்ய சுயேட்சை வேட்பாளர்களுக்கு உரிய அனுமதியை தேர்தல் அதிகாரிகள் அளிக்கவில்லை. அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டனர்.
எனக்கு பிரசாரம் செய்ய போதிய அவகாசம் தரவில்லை என கூறி மே 15ம் தேதி, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன். அந்த புகார் மனு கிணற்றில் போட்ட கல் போல அசைவில்லாமல் கைவிடப்பட்டது.
போனில் பேசியும் நடவடிக்கையில்லை
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆர்.கே.நகர் அநியாயங்கள் குறித்து புகார் தெரிவித்தேன். தேர்தலை தள்ளி வையுங்கள் அல்லது ரத்து செய்யுங்கள் என வேண்டுகோள்விடுத்தேன். பரிசீலிப்பதாக கூறிய தலைமை தேர்தல் ஆணையரும், ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
துப்பாக்கி முனையில் பறிமுதல்
நான் பயன்படுத்திய பிரசார வாகனத்தை போலீசார் 'துப்பாக்கி முனையில்' பறிமுதல் செய்தனர். எனது சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த சின்னத்தை அடையாளம் தெரியாத அளவுக்குத்தான் தந்தனர். அதாவது, எனக்கு ஒதுக்கப்பட்ட, பானை சின்னம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த அளவு, வடிவத்தில் இல்லை.
தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
இந்த காரணங்களை வைத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று பிரவீணா தனது மனுவில் கூறி இருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எம்.துரைசாமி, இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிரவீணா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் ஆதாரம் இருக்கும்பட்சத்தில், ஜெயலலிதாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். எனவே இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா தரப்பு வாதம் புறக்கணிப்பு
இந்த மனு விசாரணையின் போது, முதல்வர் உடல்நலம் பெற்று வரும் வரை விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, பிரவீணா தரப்பில் கோரப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான அ.தி.மு.க. எம்.பி.,யும் வழக்கறிஞருமான நவநீதகிருஷ்ணன, விசாரணையை உடனே மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் இன்னும் ஆணையத்திற்கு சென்றடையவில்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
திருமாவளவன் தொடர்ந்த வழக்கு
இதேபோல காட்டுமன்னார் தொகுதியில், மிக குறைந்த ஓட்டுக்கள் (87 வாக்குகள்) வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், அத்தொகுதியில் மறு தேர்தல் நடத்த கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.