கூட்டணி விவகாரத்தில் மாட்டு தரகராக விஜயகாந்த்: தமிழருவி மணியன் தாக்கு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாட்டுத் தரகர் போல செயல்படுகிறார் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் சாடியுள்ளார்.
நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் விஜயகாந்த் பற்றி கூறியுள்ளதாவது:
முதன்முறையாக விஜயகாந்தை சந்தித்து 1 மணி நேரம் விவாதித்தேன். தி.மு.க.வின் பக்கம் சென்றால் என்னென்ன பாதகங்கள் வரும், காங்கிரஸோடு கைக்குலுக்கினால் எந்த மாதிரியான அரசியல் இழப்புகளை சந்திக்க நேரிடும், பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தால் தே.மு. தி.க.வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும், 2016-ல் நீங்கள் முதல்வராக நடப்பதற்கு எந்தவகையில் பா.ஜ.க. துணையாக இருக்கும் என்பதை விரிவாக எடுத்துச் சொன்னேன்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட விஜயகாந்த், தேர்தல் வருவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. நீங்கள் சொன்னதை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்' என்றார். மற்றபடி எந்த உறுதிமொழியையும் தரவில்லை.
2வது இடம்தான் என்றேன்...
ஆனால், பா.ஜ.க. கூட்டணி என்பதே ஆரோக்கியமானது என அவர் உணர்ந்திருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலையில், நாட்கள் நகர்ந்தன. தி.மு.க.வினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிந்து இரண்டாவது முறை விஜயகாந்தை சந்தித்து ஒன்றரை மணி நேரம் விவாதித்தேன்.
அப்போது அரசியல் ரீதியாக நீங்கள் எடுக்க வேண்டிய நல்ல முடிவு பா.ஜ.க. கூட்டணிதான் என்பதையும் தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில்தான் இருக்க முடியும் என்பதையும் கூட்டணியில் தி.மு.க.வுக்கு பிறகுதான் நீங்கள் இருக்க முடியும் என்பதையும் அழுத்தமாகச் சொன்னேன். ஆனால், பா.ஜ.க.வில் யாருடைய தலைமையும் இல்லை. அதேசமயம் பா.ஜ.க. மற்றும் அதில் சேரும் கூட்டணிக் கட்சிகளை விட 1 தொகுதியாவது உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.
அதற்கு நான் உத்தரவாதம் என்றேன். ராஜ்நாத்தை நான் சந்தித்துப் பேசியபோதும் விஜயகாந்துக்கு கூடுதல் சீட் கொடுக்கப்பட வேண்டும் என்பதை விவரித்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.
பொதுக்குழு.. உளுந்தூர்பேட்டை.. குழப்பம்
விஜயகாந்திடமும் அதைத் தெரியப் படுத்தினேன். சரி என்றவர், உளுந்தூர்பேட்டை மாநாட்டில் அறிவிக்கிறேன் என்றார். ஆனால், அவர் அறிவிக்கவில்லை. அதிலிருந்தே, ஒரு நம்பத்தகுந்த அரசியல் தலைவராக அவரை பார்க்க முடியவில்லை.
உடனடி முடிவை சொல்ல வேண்டுமென யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை. அவருடன் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் பேசும்போது பொதுக்குழுவில் கலந்தாலோசித்துவிட்டுச் சொல்கிறேன் என்றார். பொதுக்குழுவுக்கு பிறகும் அவர் முடிவை சொல்லவில்லை.
மாறாக, பிப்ரவரி 2-ல் மாநில மாநாடு வைத்திருக்கிறேன். அதில் தொண்டர்களின் கருத்தை அறிந்து மாநாட்டில் அறிவிக்கிறேன் என்றார். சொன்னபடி செய்தாரா? இல்லையே! யார், யாரை யெல்லாம் கலந்தாலோசிக்க வேண்டும் என கருதினாரோ அங்கெல்லாம் கலந்தாலோசித்துள்ள விஜயகாந்த், அதனடிப்படையில் ஒரு முடிவை எடுக்கமுடியாமல் திணறினால் தலைமைப் பண்புக்கு எப்படி பொருத்தமானவராக இருக்க முடியும்?
"பா.ஜ.க. கூட்டணியை நாங்கள் ஏற்கவில்லை. அதனால் பா.ஜ.க.வினர் எங்களோடு கூட்டணி முயற்சி எடுப்பதை நிறுத்திக்கொள்ளலாம்' என்று ஒரு வரியில் சொல்லிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடப்போகுது. வெளிப்படையாக சொல்ல அவருக்கு எது தடுக்கிறது? இது ஒருபக்கம் என்றால் பா.ஜ.க. வோடு பேசிக்கொண்டே தி.மு.க.விடம் காங்கிரஸிடமும் பேசுவது நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல.
அதனால்தான் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக முடிவை தெரிவித்துவிடுவதுதானே அரசியல் ஆரோக்கியம். அது விஜயகாந்திடம் இருப்பதாக தெரியவில்லை.
மாட்டு தரகர்..
ஒருமுறை என்றால் தவறல்ல. ஆனால், தன்னிடம் பேசும் அனைத்து கட்சிகளிடத்திலும் தொடர்ச்சியாக ஒரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் ஏதோ ஒரு விசயத்தை அடைய நினைக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
மாட்டுச் சந்தையில் இரண்டு பேர் துணியில் கைகளை மறைத்து விரல் பிடித்து விலையை நிர்ணயிப்பது மாட்டு தரகர்களுக்கு தகுதியாக இருக்கலாம். அரசியல் நடத்துபவர்களுக்கு அது தகுதி அல்ல. அந்த மாட்டுத் தரகர்போல விஜயகாந்த் நடந்துகொள்கிறாரோ என்பது எனது சந்தேகம்.
இந்த உண்மையை வெளிப்படுத்துவதில் எந்த கண்ணியக்குறைவான விமர்சனமும் இருப்பதாக நான் கருதவில்லை. அதேவேளை, தரகர் பணியை கேவலமானதாகவும் சொல்லவில்லை. தரகர் வேலை வியாபாரத்துக்கு நியதி. அந்த நியதியை அரசியல் களத்தில் புகுத்தக்கூடாது.
10-ந்தேதி காலை வரை சுதீஷோடு பா.ஜ.க. தலைவர்கள் பேசிக்கொண்டுதானிருந்தார்கள். அப்போதும் சற்று பொறுத்திருங்கள் என்று தகவல் தருகிறார்கள். அதேசமயம் மன்மோகனை சந்திக்க விஜயகாந்த் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார் என்று 11-ந்தேதி செய்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலைப்பாட்டில் இருக்கும் விஜயகாந்திற்கு சொல்வது ஒன்றுதான், வாக்களிக்கும் மக்களையும் உங்களை நம்பும் தொண்டனையும் குழப்பத்தில் தள்ளாமல் வெளிப்படையாக நேர்மையாக இருங்கள்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறியுள்ளார்.