காவிரிக்கே முடிவு தெரியல.. 'மைசூர் பாக்' யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா 'சண்டை'
சென்னை: ரசகுல்லா மேற்கு வங்கத்திற்கு சொந்தமா அல்லது ஒடிசாவுக்கா என்ற சர்ச்சை வெடித்துள்ள சூழலில், இப்போது, தமிழகமும், கர்நாடகாவும், மைசூர் பாக் யாருக்கு சொந்தமானது என்ற கோதாவில் களமிறங்கியுள்ளன.
புவிசார் குறியீடுக்கு இந்த கேள்வி அவசியம் என்பதால், சோஷியல் மீடியாவில் தமிழ் மற்றும் கன்னட நெட்டிசன்கள் இதற்காக மோதிக்கொண்டுள்ளனர்.
1835ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியின்போது, மெக்காலே பிரபு மைசூர் பாக் குறித்து பேசியுள்ளதாக ஆதாரத்தை எடுத்து வைக்கிறார்கள் தமிழ் நெட்டிசன்கள்.
|
மெக்காலே சொல்லிட்டாருங்கோ
இந்திய நாடாளுமன்றத்தில் மெக்காலே மைசூர் பாக் குறித்து பேசியுள்ளாராம். மெட்ராஸ் மக்களால் மைசூர் பாக் கண்டுபிடிக்கப்பட்டது என்று, பெங்களூரை சேர்ந்த ஒரு நண்பர் என்னிடம் கூறினார் என்று மெக்காலே கூறியுள்ளாராம்.
திருடிட்டாங்களாம்
மெக்காலே மேலும் கூறுகையில், பல வருடங்களாக தமிழர்கள் மைசூர் பாக் செய்து வந்தனர். ஆனால் ஒரு வழக்கறிஞர் அந்த சமையல் குறிப்பை திருடி மைசூர் ராஜாவிடம் வழங்கிவிட்டார். மைசூர் ராஜாதான் அந்த பண்டத்திற்கு மைசூர் பாக் என பெயர் சூட்டினார் என தெரிவித்துள்ளார்.
திடீருன்னு பேரு வச்சோம்
ஆனால் கன்னட நெட்டிசன்கள் வாதமோ வேறாக உள்ளது. மைசூரை ஆண்ட 4வது கிருஷ்ணராஜ உடையார் காலத்தில், ராஜ சமையல்காரர் சர்க்கரை, நெய் சேர்த்து மைசூர் பாக் செய்ததாகவும், ராஜா அந்த பலகாரத்தின் பெயரை கேட்டபோது, எதுவுமே தோன்றவில்லை என்பதால் சமையல்காரர் மைசூர் பாக் என கூறியதாகவும் கன்னட நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
மைசூர் பாக்கிற்குள் மைசூர் இருக்குமா?
பாக் என்பது பாகம் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததாம். மைசூர் பகுதியில் (கன்னடத்தில் பாகா என்றால் பகுதியில்) என்ற பொருள் வரும் வகையில் மைசூர் பாக் என பெயர் சூட்டினாராம் ராஜாவின் சமையல்காரர். இப்படியாக நீள்கிறது சண்டை. அட யாரு கண்டுபிடிச்சா என்னப்பா, ருசியா இருந்தா வாயில போட்டு சாப்பிட்டு போக வேண்டியதுதானே!