பாஜகவின் பலத்தைப் பார்த்து பயப்படுகிறார் ஜெயலலிதா: தமிழிசை தாக்கு
சென்னை: தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விடும் என்று முதல்வர் ஜெயலலிதா பயப்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடியின் 64-வது பிறந்தநாள் சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இரட்டை வேடம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறும் இடங்களில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள், தாக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நாங்கள் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் கூறுகிறார்.
திசை திருப்புகிறார்
மீனவர் நலனுக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பாஜகாதான். அவர் கடிதம் எழுதுவதை தவிர என்ன நடவடிக்கை எடுத்தார். வாபஸ் பெற்ற எங்கள் கட்சி வேட்பாளரை தன் கட்சியில் இணைத்தார். இப்போது மக்களை திசை திருப்ப பார்க்கிறார்.
பலம் வாய்ந்த கட்சி
பாஜக பலம் வாய்ந்த கட்சியாக மாறிவிடும் என்று அவர் பயப்படுகிறார். தமிழகத்தில் பாஜக புதிய மாற்றத்தை உருவாக்கும். அந்த வகையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மோடி பிறந்தநாள் விழா
பிரதமர் நரேந்திரமோடி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக நிதி திரட்டி தாருங்கள் என்று கூறியிருக்கிறார். ஆகவே தமிழக பாஜக சார்பில் இன்னும் 5 நாட்களுக்கு நிதி திரட்டி அனுப்ப இருக்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
கூட்டணியில் விரிசலா?
கேள்வி: பூந்தமல்லியில் நடந்த ம.தி.மு.க. கூட்டத்தில் வைகோ, தி.மு.க.வை பாராட்டியும், கூட்டணி குறித்தும் சூசகமாகவும் பேசியிருக்கிறாரே?
பதில்: ஜனநாயக முறைப்படி தலைவர்கள் கருத்துக்களை சொல்வது அவர்களது உரிமை. இதை வைத்து பாஜக கூட்டணியில் பிளவு என்று சொல்வது சரியல்ல.
மதிமுக ஆதரவு
உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. பிரசாரங்களில் ம.தி.மு.க. நிர்வாகிகள் எங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதில் குழப்பம் ஏதுவும் இல்லை.
சுப்ரமணிய சுவாமி
கேள்வி: மீனவர்கள் பிரச்சினை குறித்து சுப்பிரமணியசுவாமி பேச்சுக்களை கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ளலாமா?
பதில்:-இதற்கு ஏற்கனவே நான் பதில் கூறி விட்டேன். அவரின் கருத்தை பாஜகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள கூடாது. அது தனிப்பட்ட நபரின் கருத்து. அவரின் கருத்துக்கு நான் கண்டனம் தெரிவித்து இருக்கிறேன். மத்திய தலைமைக்கும் எடுத்து சென்று இருக்கிறேன்.












Click it and Unblock the Notifications