காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகியிருக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்
காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகியிருக்கிறது என்று 5 மாநில தேர்தல் வெற்றி பற்றி பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இது மோடியின் கறுப்பு பண ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில் மிகப்பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைவர்கள் உற்சாக கருத்தினை பதிவிட்டு வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜனின் பேச்சில் அதிகம் உற்சாகம் கொப்பளித்தது.
5 மாநிலங்களிலும் வெற்றி
5 மாநிலங்களிலும் நாங்கள்தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கிறது. பஞ்சாபில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வாக்குகள் பெற்றிருக்கிறோம். மணிப்பூரிலும் வெற்றி கிடைக்கும் என்றார்.
காங்கிரஸ் காணாமல் போச்சு
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியிருக்கிறது. காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகியிருக்கிறது என்று கூறினார் தமிழிசை சவுந்தரராஜன். உத்தரபிரதேசத்தில் தொங்கு சட்டசபை வரும் என்று சொன்னார்கள். ஆனால் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மக்கள் ஆதரவு
எந்த சூழ்நிலையிலும் பாஜகவை ஆட்சியமைக்க விடமாட்டோம் என்று அகிலேஷ் யாதவ் கூறினார். இதற்காக யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி சேருவோம் என்று அகிலேஷ் யாதவ் கூறியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
எதிர்கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் பாஜக புறக்கணிக்கப்படும் என்றும் புறந்தள்ளப்படும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
மோடி முடிவுக்கு ஆதரவு
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மோடியின் முடிவுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பினை அளித்துள்ளனர். இதே உற்சாகத்தோடு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம். ஆர்.கே. நகர் தேர்தலையும் எதிர்கொள்வோம் என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.