திருச்சியில் காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட உஷா உடலுக்கு தமிழிசை நேரில் அஞ்சலி
திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட உஷா உடலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திருச்சி: போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட உஷா உடலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திருச்சி திருவெறும்பூரில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா - உஷா தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்தார்.
இதில் நிலைகுலைந்த அந்த தம்பதியினர் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று மாத கர்ப்பிணியான ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசாரின் இந்த காட்டுமிராண்டி தனத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உஷா உடலுக்கு நேற்று உடற்கூறாய்வு செய்யப்பட்டது. திருச்சி கேகே நகரின் சுந்தர் நகரில் உள்ள உஷாவின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் உஷாவின் குடும்பத்தினருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.