மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது இடத்தில் நாகரீகம் தேவை- சசிகலா புஷ்பாவிற்கு தமிழிசை அட்வைஸ்
சென்னை: மக்கள் பிரதிநிதிகள் பொது இடத்தில் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சசிகலா புஷ்பாவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அடித்ததாக கூறப்படுவது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றும் தெரிவித்தார்.
திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவும் சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார். பயணிகளின் உடைமைகளை சரி பார்க்கும் இடம் அருகே திருச்சி சிவாவை பார்த்த சசிகலா புஷ்பா, திடீரென திருச்சி சிவாவின் அருகில் சென்று, அவரது சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் தாக்கினார்.
இந்த தாக்குதல் சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நிலை குலைந்து போன திருச்சி சிவா திகைத்து நின்றார். சிவா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினும் அறுந்து கீழே விழுந்தது. விமான நிலைய போலீஸாரும், பாதுகாப்பு அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தமிழக அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு கட்சி தலைமையும் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி விளக்கம் கேட்டது.
திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தது ஏன் என்று விளக்கம் அளித்த சசிகலா புஷ்பா, தமிழக போலீஸாரை பற்றியும், எங்கள் அம்மாவை பற்றியும் திருச்சி சிவா அவதூறாக பேசினார். என்னைப் பார்த்ததும் அவரது பேச்சு அதிகமானது. இதனாலேயே நான் அவரது கன்னத்தில் அறைந்தேன் என்று கூறினார். இது தமிழக அரசியலில் மட்டுமல்லாது டெல்லி அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் திருச்சி சிவாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். தான் ராஜினாமா செய்யப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறினார்.
கட்சித்தலைவர் தனது கன்னத்தில் அடித்தார் என்றும் ராஜ்யசபாவில் கண்ணீர் விட்டு அழுதார் சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவில் அவர் பேசிக்கொண்டிருந்த செய்திகள் ப்ளாஷ் ஓடும் போதே, அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட செய்தியும் ப்ளாஷ் ஆனது. ஆனாலும் அசராத சசிகலா புஷ்பா தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
இதனிடையே திருச்சி சிவாவை எம்.பி சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சசிகலா புஷ்பாவை பொருத்தவரை ஒரு ஆண் பிரதிநிதியை பொது இடத்தில் அடிப்பது சரியல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது இடத்தில் நாகரீமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அவார்களின் கட்சித்தலைவியை நாடாளுமன்றத்தில் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பது தெரியாது. அது கட்சியின் உட்கட்சி விவகாரம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
இதே சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன், பொது இடத்தில் திருச்சி சிவாவை அடித்தது பற்றி திமுக ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இது எந்த மாதிரியான அரசியல் என்றும் திருமாவளவன் கேட்டுள்ளார்.