பூனைக்குட்டியும் வரலை, யானைக் குட்டியும் வரலை.. ஜெ. - ஜேட்லி சந்திப்பு குறித்து தமிழிசை!
விருதுநகர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்திப்பின்போது எந்த பூனைக்குட்டியும் வெளியே வரவில்லை. யானைக்குட்டியும் வெளியே வரவில்லை. இதற்கு அருண்ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டியதும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா, ஜேட்லி சந்திப்பின் மூலம் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். அதற்குத்தான் இப்படி பதிலளித்துள்ளார் தமிழிசை.
நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசையிடம் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அளித்த பதிலில், சென்னையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து பல சர்ச்சைகளை கிளப்புகிறார்கள். இதற்கு முன்பு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும், வெங்கையா நாயுடுவும் ஜெயலலிதாவை சந்தித்தபோது இதேபோல் சர்ச்சை கிளப்பினார்கள்.
இப்பபடி சர்ச்சையைக் கிளப்பும் இவர்கள் எல்லாம் ஊழலில் திளைத்தவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தவர்கள் தான்.
நாடாளுமன்றத்தில் மக்கள் நலனுக்கான வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு கேட்டுத்தான் ஜெயலலிதாவை அருண்ஜெட்லி சந்தித்தார். பா.ஜ.க. நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முனைப்புடன் செயல்படுகிறது.
எனவே இந்த சந்திப்பின்போது எந்த பூனைக்குட்டியும் வெளியே வரவில்லை. யானைக்குட்டியும் வெளியே வரவில்லை. இதற்கு அருண்ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டியதும் இல்லை. மாநில தலைமை விளக்கம் அளித்தால் போதுமானது என்று கூறினார் தமிழிசை.