ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் கால் தடுமாறி கீழே விழுந்த தமிழிசை சவுந்திரராஜன்.. பரபரத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் கால் தடுக்கி கீழே விழுந்தார் தமிழிசை சவுந்திரராஜன்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு வந்த போது கால் தடுமாறி புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலத்தில் இன்று காலை 8.15 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டை 3500 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக்கோள்களை சுமந்தபடி இன்று ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவுதல் நிகழ்ச்சியில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை
இந்தியா முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து 150 சிறிய ரக சாட்டிலைட்களை தயாரித்தனர். வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை போன்ற தகவல்களை இந்த ராக்கெட் மூலம் பெறலாம் என தெரிகிறது. இந்த செயற்கைக்கோளை ஒரு ஆண்டுக்கும் மேலாக மாணவர்கள் தயாரித்து வந்தனர்.

கணினி உதவி
கணினி உதவியுடன் மென்பொருளை செயற்கைக்கோளுடன் வடிவமைத்து ஆய்வு செய்வதே அரசு பள்ளி மாணவர்களின் பணியாகும். இந்த செயற்கைக்கோள் வானில் ஏவப்பட்டதன் மூலம் ஒரு செயற்கைக்கோள் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் பொறியாளர்களை பள்ளிகளிலேயே உருவாக்க வேண்டும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

20 மாணவர்கள்
பிரிஹன் மும்பை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 150 செயற்கைகோள்களில் இரு செயற்கைகோள்களை பிரிஹன் மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தயாரித்தனர். அந்த மாணவர்களுக்கு போட்டித் தேர்வு வைக்கப்பட்டு அதிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வைக்கப்பட்டன. பிறகு செயற்கைக்கோள், ராக்கெட் ஏவுதல் குறித்த பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்டன.

நிலைத்தடுமாறி விழுந்த தமிழிசை
மும்பை பள்ளி மாணவர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அப்போது விமானத்தில் இருந்தவர்கள் இவர்கள் சிரூடையில் வந்ததை பார்த்துவிட்டு எங்கே செல்கிறீர்கள் என கேட்ட போது அந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வருகை தந்தார். அப்போது அவர் ரெட் கார்பெட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார், உடனே அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நெல்லை செல்வதற்காக தமிழிசை காரில் ஏற முயன்றார். அப்போது அவர் தடுக்கி விழுந்தார். உடனே அவர் எழுந்து காரில் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications