சென்ட்டம் ஜாஸ்தியால் எகிறும் என்ஜினியரிங் கட்- ஆப்?
கணித பாடத்தில் கடந்த ஆண்டைவிட சென்ட்டம் அதிகரித்துள்ளதால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் 0.5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை: கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளில் அதிக அளவில் சென்ட்டம் இருப்பதால் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வெளியான தேர்ச்சி முடிவுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு கட்ஆப் மதிப்பெண்ணிற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் கணிதம், இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டைவிட அதிக மாணவர்கள் 200க்கு 200 முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு கணிதத்தில் 3 ஆயிரத்து 300 மாணவர்கள் 200க்கு 200 பெற்ற நிலையில் இநத் ஆண்டு 3 ஆயிரத்து 600 பேர் சென்ட்டம் பெற்றுள்ளனர். இயற்பியலில் கடந்த ஆண்டு 5 பேர் மட்டுமே சென்ட்டம் பெற்ற நிலையில் இந்த ஆண்டு 187 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட சென்ட்டம் சற்று குறைவாகவே உள்ளது.
கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளில் அதிக அளவில் சென்ட்டம் இருப்பதால் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பொறியியல் கட் ஆப்பை பொறுத்த வரையில் கணித மதிப்பெண்ணை 2ல் வகுத்து, இயற்பியல் மற்றும் வேதியியல் பாட மதிப்பெண்களை 4ல் வகுத்து இதன் கூட்டுத் தொகையே கட் ஆப் மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது.
கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு 0.5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுவதால் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரி கிடைக்கும். மேலும் நீட்நுழைவுத் தேர்வு காரணமாக ஒரு வேளை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், பொறியியல் சேர வாய்ப்பிருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு கடும் கிராக்கி இருக்கும் என்றே தெரிகிறது.