தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
சென்னை: ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து சாகும் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் புதிய சட்ட மசோதாவை தமிழக சட்டசபையில் இன்து தாக்கல் செய்தார் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
ஊராட்சிகள் சட்ட திருத்த முன் வடிவில் கூறியிருப்பதாவது:
ஆழ் குழாய் கிணறுகள் தோண்டும் உரிமையாளர்களின் அக்கறையற்ற தன்மையினால் சிறு குழந்தைகள் அதில் விழுந்து இறப்பது சகஜமாகிவிட்டது. எனவே தோண்டப்படும் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகிய வற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறுகளை தோண்டினால் அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாத 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப் படும்.இந்த சட்ட திருத்தம் மாநகராட்சிகள் சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் ஆகியவற்றிலும் திருத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.