வட்டிக்கே இவ்வளவு செலவு செய்தால்.. தமிழக அரசு திவாலாகி விடும்.. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
Recommended Video
சென்னை: மக்கள் நலத்திட்டங்களை கடன் பெற்று தமிழக அரசு செயல்படுத்துவதாகவும், வட்டிக்கு அதிகம் செலவிடுவதால் தமிழக அரசு திவாலாகிவிடும் என்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பட்ஜெட்டி குறித்து கூறும் போது, கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் 4 சதவீதம் வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.
இப்போது வருமானம் குறைவு
திமுக ஆட்சியில் 14.34 சதவீதமாக இருந்த வருமானம் தற்போது 10.49 சதவீதமாக குறைந்துவிட்டதாக கூறிய பிடிஆர் தியாகராஜன், இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.69 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். திமுக ஆட்சியில் 2.50 சதவீதம் முதலீடு செய்யப்பட்டது என்றும் ஆனால் அதிமுக ஆட்சியில் 2 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
மக்கள் நலத்திட்டங்கள்
மேலும் அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வரும் போது ஒருலட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் வருமானம் திமுக ஆட்சி முடியும் போது அதாவது 2011-ல் 2.09 லட்சம் கோடியாக இருந்தது. அதை வைத்து தான் அப்போது மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது தமிழகஅரசு முழுக்க முழுக்க கடன் வாங்கியே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.
வட்டி 27000 கோடி
வாங்கிய கடனுக்கு வட்டி மட்டுமே கடந்த நிதியாண்டில் தமிழக அரசு 27000 கோடி ரூபாய் செலுத்தி உள்ளது. வட்டிக்கே அதிக பணம் செலவு செய்தால் வளர்ச்சி பாதிக்கப்படும். திமுக ஆட்சி முடியும் போது மொத்த கடன் 1.02லட்சம் கோடியாக இருந்தது. இதன்படி தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 15 ஆயிரம் ரூபாய் கடன் இருந்தது. இப்போது கடன் தொகை 3.59 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 45000 கடன் உள்ளது. கடன்கள் அதிகரித்துக் கொண்டே சென்றால் தமிழக அரசு திவாலாகி விடும்.
நிபுணர்கள் குழு
இந்த சூழலில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தமிழக மக்களின் கடன் தொகையை தமிழக அரசு ஏற்றி வருகிறது. தமிழகம் நிதி மேலாண்மையில் பீகார் உத்தரப்பிரதேசத்தை விட பின்தங்கி உள்ளது. நிதி நிலையை மேம்படுத்த தமிழக அரசு பொருளாதார வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும். பெட்ரோல், தங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்துவிட்டால் மாநில அரசின் உரிமைகள் பறிபோய்விடும்" இவ்வாறு கூறினார்.