தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்.. கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு!
சென்னை: 2015-16ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த 4 பட்ஜெட்டுகளையும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை காலை 10 மணிக்கு நிதித்துறை பொறுப்பை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
2000-2001-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தாக்கல் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் பட்ஜெட் தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்சியில் முழுமையாக தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். 2016ம் ஆண்டு மே மாதம் இந்த அரசின் ஆட்சி காலம் முடிவதால், அப்போது இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும்.
எனவே இந்த பட்ஜெட்டில், அனைத்து தரப்பு மக்களையும் கவரக்கூடிய புதிய அறிவிப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரிகள் இல்லாமல், வரிச்சலுகைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் முன்னாள் முதலவர் ஜெயலலிதாவை பற்றிய கருத்து ஒன்றை எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் (தே.மு.தி.க.) கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர) அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் உரைக்கான கூட்டத்தொடர் முடிக்கப்படாமல் தொடர்ந்து நீடிப்பதால், இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.
எனவே, அவர்களுக்கு பதிலாக விஜயகாந்த் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.