சேலம் தம்பதி அமெரிக்காவில் கைது.. குழந்தைகள் பிரித்து வைப்பு.. காரணத்தை கேட்டால் கொடுமை
Recommended Video

சென்னை: 6 மாத கைக் குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை என அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்தவர் பிரகாஷ் செட்டூர். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 6 மாதங்கள் முன்பு இரட்டை குழந்தை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் ஹிமிஷா.
பிரகாஷ் தனது குடும்பத்தோடு புளோரிடாவில் வசித்தபடி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அமைதியாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் மருத்துவமனை ஒன்று புயலை வீச வைத்துவிட்டது.

கையில் வீக்கம்
ஹிமிஷாவின் இடது கையில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் சில வாரங்கள் முன்பாக, புளோரிடாவின் ப்ரோவர்ட் கன்ட்ரியிலுள்ள, மருத்துவமனையொன்றுக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர் பெற்றோர். அவர்களும் பல சிகிச்சைகள் அளித்துள்ளனர். இறுதியாக முழு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் உடலநிலை மற்றும் பொருட் செலவு இரண்டையும் யோசித்த, பிரகாஷ் தம்பதி, மற்றொரு மருத்துவமனையில் ஒபினியன் கேட்க முடிவு செய்தனர்.

ஸ்கேன் எடுக்க வலியுறுத்தல்
இதையடுத்து குழந்தைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டாம். நாங்கள் குழந்தையை அழைத்து செல்கிறோம் என டாக்டர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், இதற்காக மருத்துவமனை நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளது. குழந்தையை பராமரிப்பதில் மெத்தனம் காட்டிய குற்றச்சாட்டின்கீழ், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, பிரகாஷையும், மாலாவையும் போலீசார் கைது செய்து, போர்ட் லவுடர்டேல் பகுதியிலுள்ள சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளியே வந்த தம்பதி
மேலும், பிரகாஷின் குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கொண்டு சென்றுவிட்டது. இதனிடையே, 30,000 டாலர்கள் அளித்து பிணையில் வெளியே போகலாம் என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பணம் இல்லாததால் உறவினர்களிடமிருந்து பணத்தை திரட்டி ஜாமீனில் நேற்று வெளியே வந்துள்ளனர் பிரகாஷ் மற்றும் மாலா. இருப்பினும் குழந்தைகளை இவர்களிடம் ஒப்படைக்கவில்லை.

இது ஒரு குற்றமா
இதனிடையே, பிரகாஷின் நண்பர்கள், உறவினர்கள், இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு கேட்டால், தனிப்பட்ட வழக்குகளில் தலையிடுவதில்லை என்று பதில் வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரகாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், "குழந்தைக்கு பல்வேறு உடல் சோதனைகளை எடுக்க டாக்டர்கள் முற்பட்டுள்ளனர். இன்சூரன்சிலும் சில டெஸ்டுகள் கவர் ஆகவில்லை. எனவேதான், செலவிட பணம் இல்லை என்பதால் வேறு டாக்டரை பார்க்க முடிவு செய்துள்ளனர். இதை குற்றமாக்கி கைது செய்துவிட்டனர்" என்றார்.

எடப்பாடியிடம் கோரிக்கை
இதனிடையே பிரகாஷின் பெற்றோர், சேலத்தில் இருந்து சென்னை சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தங்கள் மகனும், மருமகளும் படும் கஷ்டங்களை கூறி, அவர்களை மீட்க மனு அளித்துள்ளனர். பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்து வைப்பது சரியல்ல என்று அவர்கள் குற்றம்சாட்டினர். எங்களிடம் பேரப்பிள்ளைகளை கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள், நாங்களே வளர்த்துக்கொள்கிறோம் என்று உருக்கமாக தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications