வாட்ஸ் அப்பில் அரசு திட்டங்கள், அறிவிப்புகளை மக்களிடம் ஷேர் செய்ய தமிழக அரசு முடிவு!
சென்னை: தமிழக முதல் அமைச்சரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நலதிட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகள் ‘வாட்ஸ் அப்' வாயிலாக அனுப்பப்படும் பணி தொடங்கியுள்ளது.
இதன் மூலம் அரசின் செய்திகளை ஏராளமான மக்கள் ‘வாட்ஸ் அப்' வாயிலாக உடனுக்குடன் அறிந்து அவைகளை அவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள மற்றவர்களுக்கு பரிமாறிக் கொள்ளும் போது, செய்திகள் எண்ணற்ற பொதுமக்களை விரைவாகவும், மிக எளிதாகவும் சென்றடைகிறது.
செய்தியாளர்களுக்கும், எங்கிருந்தாலும் தகவல் உடனடியாக போய் சேரும். மேலும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் செய்திதுறை விரைந்து செய்து வருகின்றது. படிப்படியாக வாட்ஸ் அப் வசதி கொண்ட தமிழக மக்கள் அனைவருக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாம்.
ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சி இதுபோன்ற வாட்ஸ் அப் வழி, தகவல் பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்பான தகவல்கள் மிகவும் காலதாமதமாக பரிமாறப்பட்டு வருகிறது. அனைத்து தகவல்களும், தினந்தோறும் ஷேர் செய்யப்படுவதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.