ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வர்.. அரசு வெப்சைட்டில் அதிரடி மாற்றங்கள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது இலாகாக்களை யார் கவனிப்பது என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து முதல்வர் இலாகாக்களை மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என கடந்த செவ்வாக்கிழமை ஆளுநர் அறிவித்தார்.
இந்நிலையில், அரசு வெப்சைட்டிலும் இந்த மாறுதல் உடனடியாக செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா என அரசு வெப்சைட் குறிப்பிடுகிறது. அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட இலாகாக்கள் பன்னீர்செல்வம் பெயருக்கு பின்னால் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா பெயருக்கு பின்னால், வெப்சைட் பக்கம் வெறுமையாக உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அப்போது பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அழுதபடியே பதவியேற்றனர். முதல்வர் அலுவலகத்திற்குள் சென்று பன்னீர்செல்வம் கோப்புகளை பார்க்கவில்லை.
அரசு வெப்சைட்டிலும் சில காலம் ஜெயலலிதா பெயரே முதல்வர் லிஸ்டில் இருந்தது. ஊடகங்கள் சுட்டிக் காட்டிய பிறகு மாற்றப்பட்டது. இந்நிலையில், இப்போது, முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்த அமைச்சகங்கள் உடனடியாக பன்னீர்செல்வம் பெயருக்கு பின்னால் மாற்றப்பட்டுள்ளது.