அதிர்ச்சி.. நாட்டிலேயே தமிழகத்தில்தான் வேலையில்லாதிண்டாட்டம் அதிகம்.. கலக்கும் கர்நாடகா, ஆந்திரா!
Recommended Video
சென்னை: கடந்த செப்டம்பரில், கிட்டத்தட்ட 4,000 இளைஞர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணிகளுக்கு போட்டியிட்டனர். 40 நாட்கள் நடந்த நேர்காணலில், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பி.இ.க்கள் மற்றும் எம்பிஏக்கள் உள்ளிட்ட தொழில்முறை பட்டதாரிகள் என பல விண்ணப்பதாரர்கள் இருந்தனர்.
இரண்டு மாதங்கள் கழித்து கோவை மாநகராட்சியில் கழிவு அகற்றக்கூடிய பணியாளர்களுக்கான பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. 549 பணியாளர்களுக்கான தேர்வில் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் பலரும் பட்டதாரிகள்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதன் பலன் இன்னமும் தமிழகத்துக்கு கிடைக்க வில்லை என்பதை இது போன்ற சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வெளிநாட்டு பயணம்
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சில மாதங்களுக்கு முன்பாக அரசு முறை பயணம் மேற்கொண்டு சுமார் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். 8 ஆயிரத்து 735 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் தமிழகம் வரும் என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

3 லட்சம் கோடி
இந்த பயணத்துக்கு முன்பாக எடப்பாடி அரசு இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி இருப்பது இதில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் வருகை தரப்போகிறது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அப்போது அரசு அறிவித்திருந்தது.

பல வருடங்கள்
தொழில்துறை முதலீட்டாளர்கள் அரசின் இந்த முயற்சியை பாராட்டி இருந்தபோதிலும், முயற்சி என்பது பலனாக கையில் கிடைப்பதற்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்படும் என்றே தெரிகிறது. தொழிலாளர் சக்தி ஆய்வு 2017-2018 முடிவுகள் சமீபத்தில், வெளியாகி இருந்தது. அதில் முன்னேறிய மாநிலங்களை பொறுத்தளவில் தமிழகத்தில்தான் வேலைவாய்ப்பு திண்டாட்டம் என்பது அதிகமாக இருப்பதாக தெரியவந்தது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் 7.6 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. தேசிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்ட அளவு 6.1 சதவீதம்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா
ஆந்திராவில் 4.5%, கர்நாடகாவில் 4.8% மற்றும் மஹாராஷ்ட்ராவில் 4.9 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 4.6 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. அந்த வகையில் முன்னேறிய மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக நிலவக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

ஊதியம்
இதுகுறித்து சிஐடியு, செயல் பொதுச் செயலாளர் கண்ணன் கூறுகையில், தனியார் துறையில் பணி பாதுகாப்புடன் குறைந்தபட்சம் 18,000 முதல் அதிகபட்சம் 35 ஆயிரம் வரை கண்டிப்பாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நிர்ணயத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மெட்ராஸ் பொருளாதார பள்ளியின் இயக்குனர் சண்முகம் கூறுகையில், தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நிகழக் கூடிய பொருளாதார மந்தநிலை தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்.

தொழில்துறை காரிடார்
சிஐஐ அமைப்பின் தமிழக மாநில கவுன்சில் தலைவர் சந்திரமோகன் கூறுகையில், சென்னை-கன்னியாகுமரி இடையேயான தொழில்துறை காரிடார் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். இது ஒரு ஒருங்கிணைந்த நல்ல வளர்ச்சி திட்டம். இதன் மூலமாக தமிழகம் மிக வேகமான வளர்ச்சியை அடையும். பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications