எப்ப நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் சந்திப்போம்... ஏன்னா?... ஜெயக்குமார் சொல்றத கேளுங்க!
முதல்வர் பழனிசாமி அரசின் மீது எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அதனை சந்திக்கத் தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை : முதல்வர் பழனிசாமி அரசின் மீது எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அதனை சந்திக்க அரசு தயாராக இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : இந்த ஆண்டு இறுதிக்குள் 6,500 விசைப்படகுகளில் டிரான்ஸ்மீட்டர் கருவி பொருத்தப்படும் என்றார். தொடர்ந்து அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,ஜெயலலிதாவின் ஆட்சியை கலைத்துவிடலாம் என்று தினரகனும், ஸ்டாலினும் கனவு காண்கிறார்கள்.

ஸ்டாலின், தினகரனின் கனவு எப்போதுமே நிறைவேறாது, முதல்வர் பழனிசாமி அரசின் மீது எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அதனை சந்திக்க அரசு தயாராக இருக்கிறது. ஏனெனில் இந்த அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஜெயலலிதா வழியில் ஆட்சியை வழிநடத்தி செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அதனால் அரசுக்கு பாதகம் ஏற்படாது அனைவரும் ஒற்றுமையாக இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சியை வழிநடத்திச் செல்வோம் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல இது குதிரை பேர ஆட்சியல்ல, குதிரை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு. ஆர்கே நகர் தொகுதியில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவதில் எந்த குறையும் இருக்காது. ஆர்கே நகர் மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications