நாட்டுக்காக தியாகங்கள் செய்த எச்.ராஜாவை கருணாசோடு ஒப்பிடுவதா.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்
சென்னை: எச்.ராஜா பல தியாகங்களை நாட்டுக்கு செய்து உயர்ந்த இடத்திற்கு வந்தவர் என்று, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் டிவி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் உதயகுமார் கூறிய சில வார்த்தைகளை அந்த டிவி சேனல், நிகழ்ச்சிக்கான விளம்பர காட்சிகளாக, ஒளிபரப்பி வருகிறது. அதில், எச்.ராஜாவை கைது செய்ய உங்களுக்கு பயமா என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, உதயகுமார் கூறியதாவது:
எச்.ராஜா, இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களில் ஆளும், கொள்கை, லட்சியத்தோடு உள்ள மாண்புமிகு பாரத பிரதமர் தலைமையில் இயங்குகின்ற, இந்த தேசத்திற்காக உழைத்த ஒரு இயக்கத்தின் (பாஜக) பொதுச்செயலாளராக இருப்பவர்.
எந்த நிலையில் அந்த இடத்திற்கு வந்திருப்பார்? எத்தனை உழைப்புகள், சேவைகள், தியாகங்களை இந்த நாட்டுக்கு செய்திருப்பார். அவரை கையாளும் விதமும், நேற்று ஒரு இயக்கத்தை துவங்கி, அதிருஷ்டவசமாக சட்டசபை உறுப்பினராகி, இன்று அதிருஷ்டத்தை தொலைத்துவிட்டு, தனக்கு அங்கீகாரம் இல்லையே என்று, மீடியா விளம்பரத்திற்காக உளறுவதை (கருணாஸ்) வைத்து அவரையும், இவரையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க கூடாது. இவ்வாறு உதயகுமார் தெரிவித்துள்ளார்.
[என்னதான் நடக்கிறது ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில்? ரசிகர்கள் கடும் ஆதங்கம்]
பாஜகவில் கூட ராஜாவிற்கு இவ்வளவு மரியாதை கொடுத்து யாரும் பேசியதில்லை, ஆனால், அதிமுகவில் அவரது அருமையை தெரிந்து வைத்துள்ளார்கள் என புழகாங்கிதம் தெரிவிக்கிறார்கள், ராஜா ஆதரவாளர்கள்.