பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி.. இது என்ன பிக்பாஸ் கமலுக்கு வந்த சோதனை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக அரசியலை அப்படியே பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன ஒன்று, இதில் உலக நாயகன்தான், பிக்பாஸ். அரசியலிலோ யார் பிக்பாஸ், யார் பங்கேற்பாளர்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
உண்மையை சொன்னாால், கமல் நடத்தும், பிக் பாஸ் ரொம்ப லேட். ஏற்கனவே தமிழக மக்கள் பிக்பாஸை பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட்டை பார்ப்பவர்கள் மனதில் ஓடுவது இதுதான்.
ஏற்கனவே பல மொழி சேனல்களில் கல்லா கட்டியது பிக்பாஸ் கான்செப்ட் தமிழகத்திற்கு புதுமையானது. முதல் முறையாக பலருக்கும் நேற்றுதான் அந்த நிகழ்ச்சியின் விதிமுறைகள் பற்றி தெரியவந்தது.
அறிவிக்கப்படாத பிக்பாஸ்
விதிமுறைகளை பற்றி அறிந்ததும்தான் பலருக்கும் புரிந்தது, இந்த பிக்பாஸ்தானே கடந்த டிசம்பரில் இருந்து தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டுள்ளது என்பதும். என்ன ஒன்று என்றால், அது அறிவிக்கப்படாத பிக்பாஸ். இது அறிவிக்கப்பட்ட பிக்பாஸ்.
கைகாட்டும் இடம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை என்பது, பங்கேற்பாளர்கள் 100 நாட்களுக்கு ஒரே இடத்தில்தான் தங்க வேண்டும். அது கமல் கை காட்டும் இடம். தமிழகத்திலும் இதேபோல பங்கேற்பாளர்கள் உள்ளனர். இங்கு கமலுக்கு பதில் கை காட்டுவது டெல்லி.
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர்தான். முதல் போட்டியாளராக அரங்கத்திற்குள் காலடி எடுத்து வைத்தவர் பன்னீர்செல்வம்தான். அவரது பெர்ஃபார்மன்ஸை பார்த்து அசந்து போன பிற போட்டியாளர்களும் களமிறங்கி கலக்க ஆரம்பித்துள்ளனர். இப்போது இவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு அசத்தல் போட்டியுள்ளது. யார் பிக்பாஸ் சொல்வதை கேட்டு வெற்றி பெறுவது என்பதுதான் அந்த அனல் பறக்கும் போட்டி.
ஓட முடியாது
இந்த பிக்பாசிலும், டெல்லி சொல்லுமிடத்தை தவிர்த்து வேறு எங்கும் பங்கேற்பாளர்கள், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. கமலை போன்ற ஒரு நடுவர்தான் இங்கும் கட்டளைகளை பிறப்பிக்கிறாராம். கமலை பார்த்து எப்படி பங்கேற்பாளர்கள் உருகினார்களோ, உணர்ச்சிவசப்பட்டு உருகி பேசினார்களோ, அதேபோலத்தான், இந்த பங்கேற்பாளரும், தங்கள் பிக்பாசை பார்த்து நெகிழ்ந்துபோய் உள்ளனராம்.
காலக்கெடு
கமல் நடத்தும் பிக்பாசுக்கும், இதற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. டிவி நிகழ்ச்சியிலோ, கமல் சொல்லுமிடத்தில், 100 நாட்கள் தங்கினால் போதும், இந்த நிகழ்ச்சியிலோ, சட்டசபை தேர்தல் வரும்வரை அடைபட்டுதான் கிடக்க வேண்டும். குடியரசு தலைவர் தேர்தலுக்கு பிறகு அதிரடியாக எலிமினேஷன் நடந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கண்காணிப்பு
ஏன் இவர்கள் தப்பவே முடியாதா என்ற கேள்வி உங்களுக்கு திடீரென கிளம்புமே. அப்படியானால் நீங்கள் நிகழ்ச்சியை சரியாக கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஆம், 30 சிசிடிவி காமிராக்களை கொண்டு பங்கேற்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள் என்பதுதான் நிபந்தனையே. ஐடி ரெய்டு, சிபிஐ ரெய்டு என இங்கும் இருக்குதே மூலைக்கு மூலை சிசிடிவி கேமராக்கள். அப்புறம் எப்படி தப்புறதாம்? முனககூட முடியாது!