தமிழக ரயில் மறியல் போராட்டம்... தஞ்சை, கடலூரில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் கைது #cauvery
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் திமுக, காங்., ம.ந.கூ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இன்று காலை முதல் தொடங்கிய இந்த ரயில் மறியல் போராட்டம் நாளை வரை, அதாவது 48 மணி நேரம் நடைபெறுகிறது.
தமிழகத்தின் பல முக்கிய ரயில் நிலையங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், தஞ்சை அருகே அய்யனாபுரத்தில் திருச்சி-நாகூர் ரயிலை மறித்த விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், திருவாரூர் அருகே முடிக்கொண்டானில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் ரயில் மறியல் செய்தனர். திருவாரூர் அருகே கொடிக்காபாளையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் போராட்டம் நடத்தினார்.
கடலூர் பரங்கிப்பேட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைதுசெய்தனர்.