ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ரஜினி அரசியல் பிரவேசம்... தமிழிசை, பொன். ராதாவுக்கு ஒத்த கருத்தே இல்லையே!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ரஜினியின் அரசியல் பிரவேசம் என எல்லாவற்றிலும் முரண்பாடான கருத்துகளை கூறுவதையே தமிழக பாஜக தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆகியவற்றில் முரண்பாடான கருத்துகளையே தமிழிசை சௌந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் எந்த விவகாரமாக இருந்தாலும் சொல்லி வைத்தாற்போல் ஒரே கருத்துகளையே தெரிவிப்பர். வாக்கியங்கள் மாறினாலும் அதன் அர்த்தம் சுற்றி சுற்றி ஒன்றையே குறிக்கும்.
ஆனால் பாஜக மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜனும், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனும் மாறி மாறி தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே. நகரில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் வேட்பாளரான டிடிவி தினகரன் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. குறிப்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசையும் தெரிவித்தார். மேலும் மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்து தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று மனு அளித்தார்.
தேர்தலை ரத்து செய்க...
மேலும் பணப்பட்டுவாடா குறித்து தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இடைத்தேர்தலில் பண பலத்தால் மக்களை விலைக்கு வாங்க அதிமுகவின் அம்மா அணி முயற்சி செய்கிறது. பணப்பட்டுவாடா நடந்த பிறகு, தேர்தல் நடத்தினால் அது ஜனநாயக முறைபடி இருக்காது. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தேர்தலை ரத்து கூடாது
இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதால் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். எனவே தேர்தலை நடத்தியே தீர வேண்டும். அப்போதுதான் மக்களின் செல்வாக்கு யாருக்கு என்று தெரியும் என்ற தொனியில் பேசினார்.
ரஜினியுடன் கங்கை அமரன் சந்திப்பு
இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரன், நடிகர் ரஜினி காந்தை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி காந்த் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது போல் கூறினார். அதே கருத்தை தமிழிசை சௌந்தரராஜனும் தெரிவித்தார். அதாவது இடைத்தேர்தலில் ரஜினி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறார் என்றார். இதற்கு உடனே ரஜினி மறுப்பு தெரிவித்தார்.
ரசிகர்களுடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களுடனான சந்திப்பின் போது, தன்னை வைத்து அரசியல் ஆதாயம் செய்ய கட்சிகள் முயற்சிப்பதாகவும், தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த தமிழிசை, ரஜினியின் தயவால் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும், ரஜினியின் தயவு எங்களுக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
பாஜகவில் ரஜினி வந்தால்...
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினி தனி கட்சி தொடங்கினாலும், அவர் பாஜகவில் இணைந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்தார். ஒரே மாநிலம், ஒரே கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதுபோல் மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பதால் எந்த கருத்தை ஏற்பது என்று கட்சியினர் குழம்பி உள்ளனர்.