வைகோவின் தாயார் எதிர்த்து போராடி மூடிய டாஸ்மாக் கடை... கலிங்கப்பட்டியில் இருந்து அகற்றம்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மற்றும் ஊர்மக்கள் தொடர்ந்து போராடி வந்த கலிங்கப்பட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
கலிங்கபட்டி : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் செயல்படும் டாஸ்மாக்கை அகற்ற வலியுறுத்தி நீண்ட நாட்களாக நடந்த போராட்டம் வெற்றி பெற்றதன் அடையாளமாக இன்று அந்தக் கடை அகற்றப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை இருந்ததை கண்டித்து கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. வைகோவின் தாயார் மாரியம்மாள் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுடன் களத்தில் இறங்கிப் போராடினார்.
இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை புறப்பட்ட வைகோவும் பொதுமக்களுடன் இணைந்து டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டக்களத்தில் குதித்தார். இந்தப் போராட்டத்தின் போது கடையை தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கும்பலை கலைத்தனர்.
இதனிடையே கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த நவம்பவர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இந்நிலையில் ஏறத்தாழ 8 மாதங்களுக்குப் பிறகு அந்தக் கடையை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள சரக்கு பாட்டில்கள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றி குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து விரைவில் இந்த கடை முற்றிலும் மூடுவிழா காண உள்ளதால் அந்தப் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.