நாடாளுமன்ற தேர்தல்: மதுக்கடைக்கு 3 நாள் விடுமுறை!
சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவிததுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது,
''தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதுதான் இறுதி எண்ணிக்கையாகும். வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தாலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படமாட்டாது.
ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,500 வாக்காளர்கள் என்ற விகிதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் பணியில் தற்போது 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்துவிட்டது.
வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் முடிவாகி, அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய ஓட்டுச்சீட்டு அச்சிடப்பட்டதும் இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்படும். 3ஆம் கட்ட பயிற்சி, தேர்தலுக்கு முந்தின நாள் தரப்படும்.
பொது விடுமுறை
தேர்தல் தினமான ஏப்ரல் 24ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சில தொழிலுக்கு விதிவிலக்கு உள்ளது.
மதுக்கடைகள் மூடல்
பொதுவாக தேர்தல் தினத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி தேர்தல் நடப்பதால், ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது.
மது விற்பனை அதிகரிப்பு
ஆனால் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாட்களின் மாலையில் கடைகளில் அதிக கூட்டம் கூடி, மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
மூன்று நாட்கள் லீவ்
இதை தவிர்ப்பதற்காக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 22ஆம் தேதி காலையில் இருந்தே மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்துள்ளோம். இதற்கான உத்தரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த உத்தரவு வந்துவிட்டால், 22, 23, 24ஆம் தேதி ஆகிய 3 நாட்களும் முழுமையாக மதுக்கடை மூடப்பட்டு இருக்கும்'' என்றார்.