அங்கிட்டு 'குடி'மகனாக்கி வருமானம் பார்க்க நினைச்சா..இங்கிட்டு டாஸ்மாக்கை உடைச்சே ரூ.7 கோடி நஷ்டமாம்!
தமிழகத்தில் மூடப்பட்ட இடங்களுக்கு மாற்றாக வேறு இடங்களில் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மதுபான் கடைகளை சூறையாடி வருவதால் இது வரை அரசுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதில் ரூ.7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2016 சட்டமன்ற தேர்தலில் போது அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். இதன்படி அதிமுக அரசு பொறுப்பேற்றதும் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதே போன்று மக்களின் அபிமானத்தை பெற விரும்பிய சசி அணியின் முதல்வர் பானிச்சாமி கடந்த மார்ச் மாதம் மேலும் 500 கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், மதுபானக் கடைகளை மூடுவதால் அரசுக்கு வருமான இழப்பு நேரிட்டள்ளது.

ஐகோர்ட் தடை
இந்நிலையில் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மாற்று இடங்களில் அமைக்க அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக மதுபான்கடை அமைக்கக் கூடாது, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் டாஸ்மாக் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

துவம்சம் செய்யப்படும் கடைகள்
எனினும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பெண்களே களத்தில் இறங்கி மதுபாட்டில்களை போட்டு உடைப்பதோடு, கடைகளை துவம்சம் செய்து வருகின்றனர். திருப்பூர் சாமளாபுரத்தில் வெகுண்டெழுந்த பெண்களின் போராட்டம் காஞ்சிபுரம், உளுந்தூர்பேட்டை என மாநிலம் முழுவதும் பரவி வருகிறது.

இழப்பு எவ்வளவு?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெண்கள், மாணவர்களால் தீவிரமாக எடுத்துச் செல்லப்படும் போராட்டம் காரணமாக இது வரை 40க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் துவம்சம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மதுபாட்டில்களை போட்டு உடைத்தன் காரணமாக சுமார் ரூ. 7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விழி பிதுங்கி நிற்கும் அரசு
இதனால் பொதுமக்களை குடிமகன்களாக்கி வருமானம் பார்க்க நினைக்கும் அரசுக்கு பெரும்சிக்கலை ஏற்படுத்தியுள்ளது பொதுமக்களின் போராட்டமும், டாஸ்மாக் கடைகள் சூறையும். எனினும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் இயங்கும் கூத்தும் தமிழகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications