தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை ரயில் மோதி பலி
வேலூர்: வாணியம்பாடி அருகே தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை தண்டவாளத்தை கடக்கையில் ரயில் மோதி உடல் சிதறி பலியானார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே இருக்கும் பால்காரர் சுப்பிரமணிய தெருவில் வசிப்பவர் அன்பழகன். மத்திய பாதுகாப்பு படையில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பூங்கொடி(48). அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். அவர்களுக்கு சிவராஜ் என்ற மகனும், சசிகலா(22) என்ற மகளும் உள்ளனர்.
பூங்கொடி வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்ற சென்றார். நேற்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் எடுத்துச் செல்ல நள்ளிரவு ஆகிவிட்டது. அதன் பிறகு அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்றியவர்கள் அவரவர் ஊர்களுக்கு செல்ல வாணியம்பாடி ரயில் நிலையம் சென்றனர்.
இரவு 1.30 மணிக்கு பூங்கொடி அரக்கோணம் ரயில்கள் வரும் பிளாட்பாரத்திற்கு செல்ல தண்டவாளத்தை கடந்தார். அப்போது ஜோலார்பேட்டை நோக்கி வந்த காவேரி எக்ஸ்பிரஸ் பூங்கொடி மீது மோதியதில் அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
என்ஜினில் சிக்கி துண்டான அவரது உடலின் ஒரு பகுதி சுமார் 200 மீட்டர் வரை ரயிலில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசர் பூங்கொடியின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.
பூங்கொடியின் மகள் சசிகலாவுக்கு வரும் 4ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் பூங்கொடி இறந்தது அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.