ஆசிரியர்களுக்கு கல்வி அறிவோடு இணைய அறிவும் அவசியம்... காரைக்குடி கருத்தரங்கில் தகவல்
இன்றைய ஆசிரியர்கள் கற்பித்தல் மட்டுமின்றி கற்கும் ஆசிரியர்களாகவும் இருக்க வேண்டும் என்று காரைக்குடி டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
காரைக்குடி: ஆசிரியர் வளர்ச்சித் திட்டம் என்பது பற்றிய கருத்தரங்கம் காரைக்குடி டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயஸ்ரீ அவர்கள் குத்துவிளக்கேற்றி அனைவரையும் வரவேற்றார்.
டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் சார்பாக நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தினை துறைத்தலைவர் திருமதி அழகுமீனாள் ஒருங்கிணைத்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் வணிகவியல்துறை முனைவர் பேராசிரியர் குருமூர்த்தி " ஆசிரியர் வளர்ச்சி" பற்றி சிறப்பான கருத்துக்களை எடுத்துக்கூறினார். நன்னூல், திருக்குறள் தேவாரம் போன்ற நூல்களின் வழி ஆசிரியரின் தன்மைகளைச் சுட்டிக்காட்டியும் தொடக்க உரை நிகழ்த்தினார்.
அசிரியர்களுக்கு இணைய அறிவு
இன்றைய ஆசிரியர்கள் கற்பிக்கும் ஆசிரியர்களாக மட்டுமே இருக்கின்றனர். அவர்களின் கற்கும் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்றார். ஆசிரியர்கள் கற்க வேண்டும் அப்போதுதான் பாடம் நடத்தும் போது அவர்களுக்கு எளிதாக புரிய வைக்க முடியும் என்றார். ஆசிரியர்கள் தங்களின் பொது அறிவுத்திறனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இன்றைய தொழில் நுட்ப அறிவும், இணைய அறிவும் அவசியம் என்று கூறினார்
கற்பித்தலில் உருமாற்றம்
கல்லூரி துணைமுதல்வர் திருமதி விசாலாட்சி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முதல் நாள் பிற்பகல் மதுரை பாத்திமா கல்லூரி ஆங்கிலத்த இணைப் பேராசிரியர் முனைவர் சாகிரா பானு கற்பித்தலில் உருமாற்றம் பற்றி சிறப்பான முறையில் உரையாற்றினார்.
கற்பித்தலில் நீதிநெறி முறைகள்
இரண்டாம் நாளாக முதல் அமர்வில் லேடிடோக் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சுகஜோசா 'கற்பித்தலில் நீதிநெறி முறைகள்' பற்றிய கருத்துக்களை விளக்கப் படங்கள் மூலமாக எடுத்துக்காட்டினார்.
கற்பித்தலின் அணுகுமுறைகள்
இரண்டாம் அமர்வில் திருச்சி மனிதவளம் மற்றும் சமூக அறிவியல்துறை துணை பேராசிரியர் முனைவர் வினோத் அவர்கள் கற்பித்தலின் அணுகு முறைகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். நிறைவு விழாவில் திரு பெரிரா அவர்கள் இந்நிகழ்ச்சி தொடர்பான பொதுவான செய்திகளை எடுத்துக்கூறினார். இதில் கலந்து கொண்ட ஆசிரியப்பெருமக்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.