சட்டப்படித் தான் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர்... தினகரன் கோஷ்டி சபாநாயகரிடம் விளக்கம்!
எந்த அடிப்படையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர் என்ற பதிலை சபாநாயகர் தனபாலிடம் தினகரன் தரப்பு வழக்கறிஞர், வெற்றிவேல் எம்எல்ஏ வழங்கியுள்ளனர்.
சென்னை : எந்த அடிப்படையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர் என்பதற்கான ஆவணங்கள் சபாநாயகர் தனபாலிடம் தினகரன் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.
இன்று காலை முதல் 3 முறை தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் அடுத்தடுத்து 3 முறை சபாநாயகர் தனபாலை சந்தித்தார். காலை 11 மணி முதல் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் வெற்றிவேல் மற்றும் அவருடன் வந்திருந்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
எப்போதும் ஊடகங்களிடம் எடப்பாடி அணியை வெளுத்துவாங்கும் வெற்றிவேல் இன்றைய பேட்டியின் போது அமைதியாகவே இருந்தார். வெற்றிவேல் உடன் வந்திருந்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
18 எம்எல்ஏக்கள் சார்பாக இடைக்கால பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த மாதிரியான சூழலில், கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு ஆளுநரை சந்தித்துள்ளார்கள் என்பதை ஆவணமாக கொடுத்துள்ளோம். சபாநாயர் முன் எங்களிடம் இருக்கும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம், அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை.
நாங்கள் சில ஆவணங்களை கேட்டுள்ளோம், அதை அவர்கள் கொடுத்த பின்னர் நாங்கள் அதற்கு விளக்கம் அளித்த பின்னர் கடைசியாகத் தான் நேரில் ஆஜராக வேண்டும். அதை விடுத்து நேரில் ஆஜரான பின்னர், அவர்கள் அளிக்கும் ஆவணங்களுக்கு நாங்கள் பதிலளிக்கலாம் என்பது சரியான விஷயம் கிடையாது.
சட்டத்திற்கு உட்பட்டு ஆவணங்களை அளித்த பின்னர், நேரில் அழையுங்கள் என்று சொல்லியுள்ளோம். 3 மணிக்கு எங்களை ஆஜராகச் சொன்னார்கள், நாங்கள் 3 மணிக்கு மன்பே ஆஜராகியிருக்கிறோம், அப்படி இருக்கும் போது நடவடிக்கை எடுக்கலாமா.
கர்நாடகாவில் இருக்கும் எம்எல்ஏக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர். சபாநாயகர் இன்று தான் சொல்கிறார் கடிதம் கொடுத்தால் பாதுகாப்பு அளிக்கத் தயார் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு முன்னரே நடவடிக்கை தொடங்கிவிட்டதாக நீதிமன்றத்தில் கூறுகின்றனர்.
கர்நாடகா போலீஸ் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ.க்கள் ஆஜராக அனுமதி கேட்டுள்ளோம். வெற்றிவேல் எம்எல்ஏவிற்கும் சேர்த்து தான் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். நியாயத்தை வெளிப்படுத்த சட்ட ரீதியாக அணுகி வருகிறோம், இறுதி முடிவை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.