ஆட்சி கவிழ்ப்பு மிரட்டலா? விஜயபாஸ்கர் மூலம் தினகரனுக்கு பதிலடி தந்த எடப்பாடி கோஷ்டி!
ஆட்சியை கவிழ்ப்பேன்னுக்கு மிரட்டல் விடுத்த டிடிவி தினகரனுக்கு விஜயபாஸ்கர் விவகாரம் மூலம் சரியான பதிலடி தந்துவிட்டோம் என்கிறது எடப்பாடி கோஷ்டி.
சென்னை: அதிமுகவை ஒப்படைக்க கெடு விதித்ததுடன் ஆட்சியை கவிழ்ப்பேன் என மிரட்டிய தினகரனுக்கு பதிலடி தரும் வகையில்தான் குட்கா நிறுவனத்திடம் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியது தொடர்பான கடிதம் கசியவிடப்பட்டதாக கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன. திமுகவின் இந்த கோரிக்கையை எடப்பாடி கோஷ்டி ரொம்பவே ரசித்துக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி கோஷ்டியின் மகிழ்சிக்கு காரணம் என்ன விசாரித்த போது, ப்ளான் சக்சஸ் என்ற உற்சகாமே பதிலாக கிடைத்தது. அதாவது ஆர்கே நகர் தேர்தலில் தினகரனின் வலது கரமாக வலம் வந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அத்தனை பணப்பட்டுவாடா விவகாரத்தையும் அவர்தான் பார்த்துக் கொண்டார்.
ஐடி ரெய்டு
இதனால் வருமானவரி சோதனையில் சிக்கி பெரும் களேபரமே அரங்கேறியது. இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் சிறைக்குப் போனார்.
விஜயபாஸ்கரை நீக்க வலியுறுத்தல்
சிறைக்குப் போவதற்கு முன்னதாக எடப்பாடி கோஷ்டியின் அமைச்சர்களான தங்கமணியும் வேலுமணியும் தினகரனுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது டெல்லி நெருக்கடியால் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினகரன் மறுப்பு
ஆனால் தினகரனோ இதற்கு ஒப்புக் கொள்ளாமல் விஜயபாஸ்கருக்கு ஆதரவாகவே பேசி வந்துள்ளார். இதில்தான் எடப்பாடிக்கும் தினகரனுக்குமான மோதல் வெடித்தது. இதையடுத்தே சசிகலா கோஷ்டியானது தினகரன், எடப்பாடி அணிகளானது.
ஆட்சி கவிழ்ப்பு மிரட்டல்- பதிலடி
சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் இப்போது கட்சியை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்; இல்லையெனில் ஆட்சியை கவிழ்ப்பேன் என கெடுவுடன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலுக்கு பதிலடி தரும் வகையில்தான் எடப்பாடி கோஷ்டியானது விஜயபாஸ்கர் தொடர்பான கடிதத்தை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கொடுத்து புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
மகிழ்ச்சியில் எடப்பாடி கோஷ்டி
இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து விஜயபாஸ்கரை நீக்க வலியுறுத்தி வருகின்றன. இதனால் மகிழ்ந்து போயுள்ள எடப்பாடி கோஷ்டி, எங்கள் அரசுக்கு கெடு விதித்த தினகரனுக்கு இதுதான் பதிலடி என்கின்றனர்.