சென்னை அருகே பயங்கரம்... 3 சிறுவர்கள் அதிவேகமாக பைக் ஓட்டி மோதியதில் தொழிலாளி பலி
சென்னை: சென்னை அருகே தாம்பரத்தில் பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற சூப்பர் பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் கேம்ப் ரோட்டில் இந்த விபத்து நடைபெற்றது. 1400 சிசி கவாசகி நிஞா இசட் எக்ஸ் 14 ஆர் என்ற சூப்பர் பைக்கில், ராஜ கணேஷ் (17), ஆகாஷ் (15) மற்றும் பவித்ரன் என்ற மூன்று மாணவர்கள் வந்துள்ளனர்.
அப்போது சுப்பிரமா ரெட்டி என்ற 30 வயது தொழிலாளி சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சித்துள்ளார். சுப்பிரமா ரெட்டியின் சைக்கிள் மீது மாணவர்கள் அதி வேகமாக ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமா ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலைதடுமாறிய பைக்...
மிக வேகமாக வந்த பைக், சைக்கிளில் மோதியதால் நிலைதடுமாறி அருகில் இருந்த வேன் ஒன்றில் மோதியது. இதில் பைக்கில் பயணம் செய்த மூன்று பேருக்கும் முதுகுத்தண்டு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த 3 மாணவர்களும் நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹெல்மெட் அணியவில்லை...
விபத்து நடைபெற்ற போது பைக்கில் சென்ற மூன்று மாணவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. மேலும், இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான லைசன்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்களும் அவர்களிடத்தில் இல்லை என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மைனர்கள் கையில் பைக்...
சென்னையிலும் புறநகர்களிலும் இதுபோல உரிய வயது வராத பலரும் இதுபோல அதி வேகமாக பைக் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல்துறையினர் பலமுறை முயன்றும் கூட பலன் தருவதில்லை. காரணம், பெற்றோர் தங்களது மைனர் பிள்ளைகள் கையில் பைக்கைக் கொடுத்து ஓட்ட அனுமதிப்பதே இதற்கு முக்கியக் காரணம்.
தொழிலதிபர் மகன்...
விபத்தை ஏற்படுத்திய மாணவர்களில் ஒருவரான பவித்ரனின் தந்தை ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. மாடம்பாக்கத்தில் இவரது வீடு உள்ளது.
சூப்பர் பைக்...
ஒரு உயிரைப் பறித்துள்ள இந்த சூப்பர் பைக்கானது மிகவும் வேகமாக செல்லக் கூடியதாகும். நகர சாலைகளுக்கு ஏற்ற பைக் கிடையாது. ரேஸ் பிரியர்களுக்கானது இந்த பைக். இதை திறமையாக ஓட்டக் கூடியவர்கள் மட்டுமே ஓட்ட வேண்டும் என்று பைக் தயாரிப்பாளர்களே பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இந்த சிறார்கள் இதை எடுத்து வந்து ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
5 பேரிடம் மட்டுமே...
இதுபோன்ற அதி வேக பைக் நமது நாட்டில் மிகக் குறைவான பேரிடமே உள்ளதாம். சென்னையில் 5 பேர்தான் இதை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெற்றோர்களே உஷார்...
பெற்றோர்களே உங்களது பிள்ளைகள் ஆசைப்படுகிறார்களே என்று எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுப்பதை விட்டொழியுங்கள். அதுதான் அவர்களுக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது.