தஞ்சை கதிராமங்கலத்தில் போலீஸ் குவிப்பு- ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் என தகவல் பரவியதால் பதற்றம்!
தஞ்சை கதிராமங்கலத்தில் போராட்டம் நடைபெறும் என தகவல் பரவியதால் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடைபெறலாம் என்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் கதிராமங்கலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கும் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ஒடுக்குவதில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கதிராமங்கலம் போராட்ட களமாக உள்ளது. அங்கு செல்லும் இயக்கங்கள், கட்சிகளின் தலைவர்களை நடுவழியில் மறித்து போலீசார் கைது செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மீத்தேன் எடுக்கும் பணிகளுக்கு எதிராக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனைக் (ஓஎன்ஜிசி) கண்டித்து இன்று கதிராமங்கலத்தில் போராட்டம் இன்று நடைபெறும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து கதிராமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.