அதிமுகவின் ஜனநாயக விரோத காட்டு தர்பாரை வன்மையாக கண்டிக்கிறோம்: தா. பாண்டியன்
சென்னை: அதிமுகவின் ஜனநாயக விரோத காட்டு தர்பாரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை உள்ளாட்சி அமைப்புகளின் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தலை செப்டம்பர் 18ந் தேதி நடத்திட தமிழக தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் அறிவிப்பு செய்தது. இந்த அவசர அறிவிப்பால் எதிர்க் கட்சிகளின் போட்டியிடுவதற்கான போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
போதுமான கால அவகசமின்றி இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தலில் எதிர்க்கொள்வதென முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் வேட்பு மனுத் தாக்கல் பல இடங்களில் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற வேண்டும் என்ற தீயநோக்கத்தோடு வியாழக்கிழமை மனுதாக்கல் செய்ய சென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிரையும் மற்றும் பாஜக கட்சியிரையும் போட்டியிட மனுத் தாக்கல் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அதிமுகவினரின் இந்த ஜனநாயக விரோதச் செயலை தமிழக காவல்துறையின் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் கைகட்டி வாய்பொத்தி மௌனமாக இருந்துள்ளனர். அதிமுகவின் இத்தகைய ஜனநாயக விரோத காட்டு தர்பாரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்வதை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்திய அதிமுகவினர் மீதும் இதற்கு துணைநின்ற காவல்துறையினர் மீதும் தேர்தல் அதிகாரிகள் மீது உடன் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருக்கான தேர்தலை ரத்து செய்து வாய்ப்புள்ளோர் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புதிதாக தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டும். போட்டியிட வாய்ப்புள்ளோர் மனுத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பும் சுகந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கான உரிய ஏற்பாடுகளையும் செய்திட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.