அதிமுகவில் இணைவதாக வெளியான செய்திகள்.. தா.பாண்டியன் மறுப்பு!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், அதிமுகவில் விரைவில் சேர உள்ளதாக செய்தி வெளியான நிலையில், இதை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில், தா.பாண்டியனுக்கு எம்.பி. பதவி வழங்க, அதிமுக தயாராக இருந்தது. ஆனால், அவரது சொந்த கட்சியே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முடக்கிவிட்டது.
அதேபோல, தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹரை சென்னை பல்கலையின் துணைவேந்தராக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. அவர் பதிவாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணைவேந்தர் பதவியை பெற்று தர தா.பாண்டியன் விரும்புவதாக கூறப்படுகிறது.
கூட்டணி விருப்பம்
சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற வேண்டும் என, தா.பாண்டியன் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் விருப்பத்திற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவு கிடைக்கவில்லை.
தனிக்கட்சி நடத்தியவர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தா.பாண்டியன், 1991ல் ஐக்கிய பொதுவுடமை கட்சி சார்பில், வடசென்னை எம்.பியாக இருந்தார். பல ஆண்டுகளுக்கு பின், அக்கட்சியை கலைத்து விட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
ஜெ. நேரில் வாழ்த்து
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றிருந்தது. கடந்த ஆண்டு, 80வது பிறந்த நாளை ஒட்டி பவள விழாவை கொண்டாடிய தா.பாண்டியன் வீட்டிற்கு நேரில் சென்று, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
மறுப்பு
இதையெல்லாம் மனதில் வைத்துதான், சட்டசபை தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தா.பாண்டியன் விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தா.பாண்டியன் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளார் என்று ஒரு செய்தி வெளியானது. இதை தா.பாண்டியன் இன்று மதியம் மறுத்துள்ளார். இது உண்மைக்கு புறம்பானது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.