வேளச்சேரியிலிருந்து கோடம்பாக்கத்துக்கு போராட்டத்தை மாற்றினார் தாமரை!
தன் கணவர் தியாகுவுக்கு எதிரான தனது தர்ணா போராட்டத்தை வேளச்சேரியிலிருந்து, கோடம்பாக்கத்துக்கு மாற்றிக் கொண்டார் கவிஞர் தாமரை.
திரைப்பட பாடலாசிரியை தாமரை, தனது கணவர் தியாகுவுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என தமிழ் இயக்கத் தலைவர்களுக்கு கோரிக்கை வைத்து தர்ணா போராட்டம் தொடங்கியுள்ளார்.
ஐந்து நாட்களுக்கு முன் சூளைமேட்டில் உள்ள தியாகுவின் அலுவலக வாயிலில் ஒரு பாயைப் போட்டு, தன் மகனுடன் அமர்ந்து தர்ணாவை ஆரம்பித்தார் தாமரை.
இரண்டு நாட்கள் அங்கு தர்ணா செய்தவர், வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகள் வீட்டுக்கு முன் தெருவில் அமர்ந்து தர்ணா செய்தார். இரண்டு நாட்கள் அங்கு தர்ணா இருந்தார். ஆனால் தியாகு அங்கு இல்லை என்பது தெரிந்ததும், இப்போது கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்காவில் தனது போராட்டத்தை தொடர்கிறார். இது ஐந்தாம் நாளாகும்.
இந்த விஷயத்தில் தியாகுவுக்கு ஆதரவாகவும், தாமரைக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தாமரையோடு இணைவது என்பது இனி சாத்தியமே இல்லை என்று கூறியுள்ள தியாகு, மகனிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் தனக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தாமரை அறிவித்துள்ளார். பெற்றோரின் இந்த சண்டையில் சிக்கி தெருக்களில் அலைக்கழிக்கப்படும் அந்த 11 வயது சிறுவனின் நிலைதான் பலரையும் கவலைகொள்ள வைத்துள்ளது.