ஓபிஎஸை கைது செய்து விசாரிக்க வேண்டும்... கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்!
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே முதல்வராக ஆசைப்பட்டவர் டிடிவி தினகரன் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே முதல்வராக ஆசைப்பட்டவர் டிடிவி தினகரன் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
உதகையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சரமாரியாக விளாசினார். மேலும் துரோகம் செய்ததால் தான் டிடிவி தினகரனை ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டே ஒதுக்கி வைத்தார் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
ஓபிஎஸ் குற்றச்சாட்டு
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது 2008ஆம் ஆண்டிலேயே முதல்வராக டிடிவி தினகரன் சதித்திட்டம் தீட்டினார் என்றும் ஓபிஎஸ் கூறினார். இதனையெல்லாம் அறிந்ததாலேயே ஜெயலலிதா அவரை பெரியகுளம் தொகுதிக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழையக்கூடாது என்றார் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
தங்கதமிழ்ச்செல்வன் கருத்து
இந்நிலையில் ஓபிஎஸின் இந்த பேச்சு குறித்து தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது அதிமுகவினர் ஆர்கே நகரில் படுதோல்வியை சந்தித்துள்ளனர் என்றார்.
கேவலமான பேச்சு..
அந்த தோல்வியை ஒப்புக்கொள்ளட்டும் என்றார். காளை மாடு கூட கன்று போடும் ஆனால் தினகரன் கட்சியை கைப்பற்ற முடியாது என ஓபிஎஸ் கூறியிருப்பது சின்னபிள்ளைதனமானது என்றும் அவர் கூறினார். ஓபிஎஸின் கேவலமான பேச்சு என்றும் காட்டமாக கூறினார் தங்க தமிழ்ச்செல்வன்.
ஓபிஎஸ் ஈபிஎஸ் விலகனும்
தேனி, பெரியகுளம் தொகுதியில் வந்து ஓபிஎஸ் பேசட்டும் நானும் பேசுகிறேன் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் சவால்விட்டார். கட்சியிலிருந்து இவர்கள் விலக என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
எப்படி சதித்திட்டம் சாத்தியம்?
மேலும் மேடை கிடைத்தது என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசலாமா என்றும் துணை முதல்வர் ஓபிஎஸை தங்க தமிழ்செல்வன் விளாசினார். 2008 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலேயே இல்லை என்ற அவர் அப்படியிருக்க டிடிவி தினகரன் எப்படி சதித்திட்டம் தீட்டியிருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸை கைது செய்ய வேண்டும்
தினகரன் ஓபிஎஸிடம் தனது சதித்திட்டம் குறித்து கூறினாரா என்றும் கேள்வி எழுப்பிய தங்கதமிழ்ச்செல்வன், அப்படியானால் துணை முதல்வர் ஓபிஎஸை கைது செய்து, எதற்காக இந்த பேச்சுவந்தது என்பது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.