மகளுக்கு திருமணம்: வங்கிக்கு நடையாய் நடக்கும் தாயால் பரபரப்பு
தூத்துக்குடி: மகளின் திருமணத்திற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் வங்கியில் அடமானம் வைத்த நகைக்கு முழு பணத்தையும் தராமல் 2 ஆயிரம் வீதம் தருவதாக பெண்ணின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கோமதி. இவர்களது மகள் கனிமொழிக்கு டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மகளின் திருமண செலவிற்காக கடந்த 18ம் தேதி கோமதி எட்டயபுரம் கனரா வங்கியில் தன்னிடம் இருந்த தங்க நகைகளை ரூ.42 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். அடகு வைத்த பின் வங்கி மேலாளரிடம் தனது மகளுக்கு இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.
கையில் இருந்த பணம், நகை மற்றும் பொருட்கள் வாங்கியதில் காலியாகிவிட்டது. இதர செலவிற்கு தன்னிடம் போதிய பணம் இல்லை. தனது அவசர காரணம் கருதி பணத்தை மொத்தமாக கொடுங்கள் என தனது மகளின் திருமண பத்திரிகையை காட்டி கேட்டுள்ளார். ஆனால் மேலாளர் அவ்வாறு தர முடியாது என்றும், தினமும் 2 ஆயிரம் விதம் எடுத்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த 18ம் தேதி முதல் இதுவரை வெறும் 19 ஆயிரம் மட்டுமே எடுத்துள்ளார். மகளின் திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் மீண்டும் மேலாளரிடம் சென்று முறையிட்டுள்ளார். ஆனாலும் மொத்தமாக பணம் தர முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயுள்ளார்.