கார் ரேஸ்.. பறிமுதல் செய்த சொகுசு கார்களை உரிமையாளர்களிடமே ஒப்படைக்கிறது சென்னை போலீஸ்!
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் 10 பந்தயக் கார்களை பறிமுதல் செய்த வழக்கில் தற்போது மோட்டார் வாகன ஆய்வாளரின் ஆய்வு முடிவடைந்ததை தொடர்ந்து அந்த கார்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க போலீஸார் நடவடிக்
சென்னை: சென்னை கானத்தூர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 10 சொகுசு கார்களை அவற்றின் உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நோக்கி 150 கி.மீ. வேகத்தில் 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஞாயிற்றுக்கிழமை சீறி பாய்ந்தன. அப்போது வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸார் அந்த கார்களை தடுக்க முயன்றனர். அதை மீறி நிற்காமல் போனதால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரராஜனின் கால் மீது லேசாக உரசியதில் அவர் காயம் அடைந்தார்.
தகவலறிந்த கானத்தூர் போலீஸார் அந்தக் கார்களை சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து 10 கார்களையும் பறிமுதல் செய்த போலீஸார் அதை ஓட்டியவர்களை கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கார் ரேஸ் நடத்தியவர்கள் ஸ்ரீசாத், விக்னேஸ்வரன், கிஷால், சங்கர், பிரசன்னா, ராகவேந்திரன், கரன், ராஜகோபால், எஸ்காணி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பெரும்புள்ளிகளின் மகன்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கார்களின் வடிவமைப்பில் ஏதேனும் சட்டத் திட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொள்ள மோட்டார் வாகன ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கானாத்தூர் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் அதிகாரிகளின் ஆய்வு முடிந்தது.
இதைத் தொடர்ந்து 10 கார்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீஸ் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் வேகமாக சென்ற வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.