இமெயில் முகவரிகள் நீக்கப்படவில்லை, வாட்ஸ் ஆப்பிலும் புகார் தரலாம்... கமலுக்கு அமைச்சர் பதிலடி
சென்னை: தமிழக அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசனிடம் ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் ஊழல் குறித்து மக்களே ஆதாரங்களை அனுப்புவார்கள் எனக்கூறி அமைச்சர்களின் இமெயில் முகவரிகளை டிவிட்டரில் வெளியிட்டார்.
இதையடுத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று திடீரென அரசின் இணையதள பக்கத்தில் அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் திடீரென மாயமாகின.
இதுகுறித்து அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரு அணிகளும் இணைய வேண்டும் என்றே தாங்கள் விரும்புவதாக அவர் கூறினார்.
இரட்டை இலையை மீட்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் கூறினார். தமிழக அமைச்சர்களின் இமெயில் முகவரிகள் ஏதும் நீக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மக்கள் தங்களின் புகார்களை இமெயிலில் அனுப்ப வேண்டும் என்பதில்லை, வாட்ஸ்ஆப்பிலும் அனுப்பலாம் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலடிக்கொடுத்துள்ளார்.