பெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதில் தகராறு.. கத்தியால் குத்தி தொழிலாளி கொலை.. ஒருவர் கைது
கத்தியால் குத்தி ஒருவரை கொலை செய்தது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்: பெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதற்கு இடம் பிடிப்பது தொடர்பாக நடைபெற்ற தகராறில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம் அருகே பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன், முருகையன். இருவருமே கூலி தொழிலாளிகள். இருவரும் இரவு நேரங்களில் கட்சியின் கொடிகம்பம் இருக்கும் மேடைகளில்தான் படுத்து தூங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.
யார் முதலில் அந்த மேடையில் படுத்து தூங்க இடம் பிடிப்பது என இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வருமாம். அதேபோல, நேற்றிரவு முருகையன் கொடிகம்ப மேடைக்கு வந்து முதலில் இடத்தை பிடித்து தூங்க ஆரம்பித்துள்ளார். இதனை கண்ட முருகன் கோபம் அடைந்ததுடன், அவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அதிகமாகி, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகையனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முருகையன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முருகையன் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கமாக முருகையனிடம் மேடையில் இடம்பிடிப்பது தொடர்பாக தகராறில் ஈடுபடும் முருகனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது தாம் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.