தமிழகத்தில் துணிச்சலான முதல்வர் இல்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு
தமிழகத்தில் துணிச்சலான முதல்வர் இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்: மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த துணிச்சலான முதல்வர் இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் "அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களும் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பிறகு இதுவரை 29 கோடி பேர் வங்கி கணக்கு துவங்கியுள்ளனர். இந்த வங்கி கணக்குகளில் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் விபத்து காப்பீடு திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 15.87 லட்சம் பேரும், நாகை மாவட்டத்தில் 1.73 லட்சம் பேரும் சேர்ந்துள்ளனர். ஆயுள் காப்பீடு திட்டத்தில் 3 கோடி பேர், தமிழகத்தில் 22.45 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடப்பாண்டு மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த துணிச்சலான முதல்வர் இல்லை என குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் வரவிடாமல் சில சக்திகள் முட்டுக்கட்டை போடுவதாகவும் இதற்கு தீர்வு காணாத வரையில் எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது எனக் கூறிய அவர்,
கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் பல போராட்டங்கள் நடந்தபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரே மாதத்தில் அந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தார். அதனால் தற்போது மின்சாரம் கிடைக்கிறது. மாநிலத்திற்கு துணிச்சல் மிக்க முதல்வர் தேவை. தற்போது தமிழகத்தில் துணிச்சலான முதல்வர் இல்லை எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications