இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தலைமைச் செயலகத்தில் 1,000 போலீஸ் குவிப்பு
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமைச் செயலகத்தில் இன்று 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் தலைமைச்செயலகத்தில் எம்எல்ஏக்களின் வாகனங்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்குகின்றனர். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுநர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
நுழைவு வாயிலில் தீவிர சோதனைகளுக்கு பிறகே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் சட்டப்பேரவையில் இன்று பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையின் முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் உளவுத்துறை ஐஜி, டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். சட்டம் - ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.