பட்டாசு வெடிச்சாச்சா.. போய்ப் படம் பாருங்க.. இன்று 5 காட்சிகள்!
தீபாவளியையொட்டி தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகளை திரையிட அரசு அனுமதித்துள்ளது. அக்டோபர் 4ம் தேதி வரை தியேட்டர்களில் ஐந்து காட்சிகள் காட்டப்படும்.
சென்னை: தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 4ம்தேதி வரை தினசரி ஐந்து காட்சிகள் தியேட்டர்களில் நடத்தப்படவுள்ளன.
இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு வழக்கமாக ஐந்து காட்சிகள் தியேட்டர்களில் காட்டப்படும். இந்த ஆண்டும் அதேபோல 5 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற 31.10.2016, 1.11.2016, 2.11.2016, 3.11.2016 மற்றும் 4.11.2016 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5-வது காட்சி நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையான இன்றும், நாளையும் அரசு விடுமுறையானதால், ஏற்கனவே உள்ள அரசாணையின்படி, அன்றைய தேதிகளிலும் காலை 9 மணிக்கு அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக் கொள்ளலாம். அதாவது 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம்.
அதுபோல, நடமாடும் திரையரங்குகள் இன்றும், நாளையும் காலை காட்சி 11.30 மணிக்கும், 31.10.2016, 1.11.2016, 2.11.2016, 3.11.2016 மற்றும் 4.11.2016 ஆகிய தேதிகளில் பகல் காட்சி 2.30 மணிக்கும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களின் தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக கொடி, காஷ்மோரா, திரைக்கு வராத கதை, கடலை ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இதுதவிர பைரவா டீசரும் வெளியாகி தீபாவளிக் கொண்டாட்டத்தை மேலும் தித்திப்பாக்கி விட்டது.